Saturday, August 19, 2017

காமிக்ஸ் சேகரிப்பாளனின் கதை - அன்றும் / இன்றும்

நண்பர்களுக்கு வணக்கம்,
        தபால்தலை, ரூபாய்நோட்டுக்கள் ஏன் "Brandy" பாட்டில் சேகரிப்பு கூட உண்டு.இதிலிருந்து “காமிக்ஸ்” அல்லது “காமிக்ஸ் சேகரிப்பாளன்”   எவ்வாறு வேறுபடுகிறான். காமிக்ஸ் மட்டுமே கண்களுக்கு மட்டுமல்லாது கற்பனைக்கும் சிறகுகள் தரவல்லது. ஒரு காமிக்ஸ் வாசகன் - சேகரிப்பாளன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.



               “சித்திரக்கதைப்புத்தகம்” - ஒரு பழைய புத்தகவியாபாரி, இவ்வகை புத்தகத்தைப்பற்றிய ஞானமே இல்லாதவர், பள்ளி புத்தகத்தைத்தவிர வேறு புத்தகத்தையே தொடாத (தற்கால) சிறுவர்கள், பெண்கள்(அனைவரும் அல்ல - பெரும்பாலானோர்), படிப்பறிவில்லாத பொதுமக்கள், குப்பைப்பொறுக்கும் நபர்கள், ஏன் டீக்கடையில் பஜ்ஜி மடித்து கொடுக்கும் நபரிடம் கூட ஒரு காமிக்ஸ் புத்தகமோ அல்லது புத்தகத்தின் சில பக்கங்களோ கிடைக்கப்பெற்றால் முழுப்புத்தகமாக இருந்தால் அதைக்கிழிக்காமலும், பக்கங்கள் என்றால் தூக்கி எறியாமலும் பத்திரப்படுத்தி அதை புரட்டுவதோ, ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதோ (குறைந்தபட்சம் வண்ணம் தீட்ட பயன்படுமே என்ற புரிதலுடன்) அல்லது மேலும் ஒரு படி சென்று அது சம்பந்தமான நபர்களிடம் சேர்ப்பிப்பதையோ நான் கண்கூடாக கண்டிருக்கிறேன், ஏன் எனக்கே கூட சில நபர்கள் “ஏம்ப்பா...! நீ கூட இந்த மாதிரி பொஸ்தகமெல்லாம் படிப்பியே,எங்க மொதலாளி வீட்ல எடைக்குபோட வச்சிருந்தாங்க மெனக்கெட்டு எடுத்தாந்தேன்! டீ-காபிக்கு எதுனா. . . ?” என்றபடிக்கு சில/பல புத்தகங்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறேன்( US - சென்ற அந்தப்பையன் வாழ்க பல்லாண்டுகள்).சித்திரக்கதைப்பற்றி தெரியாதவர்களுக்கே அதன்மேல் இவ்வளவு  ஈர்ப்பென்றால் அதையே சுவாசித்து வாழும் நம் காமிக்ஸ் அன்பர்களுக்கு எவ்வளவு காதலிருக்கும் இப்புத்தகங்களின்மீது.

சித்திரங்கள்-சித்திரக்கதைகள் மீதான ஈர்ப்பு நம்மவர்களுக்கு கொஞ்சம் அதிகமே,அதை மையல் என்றும் கூட சொல்லலாம்.புராதான குகை ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் முதல் இன்றைய “தினத்தந்தி-சிந்துபாத்” வரையான காலம் வரை ரசனைகளில் என்றைக்குமே நாம் தனித்துவம் மிக்கவர்கள்தான்.ஏன் சிந்துபாத்-யை மட்டும் குறிப்பிட்டு முன்மொழிகிறேனென்றால், தமிழ்நாட்டில் சிந்துபாத்தை தெரியாதவர்கள் இருக்க முடியுமா...? எனவே தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் சித்திரக்கதை ஞானம் பெற்றவர்களாகிறோம்.இல்லையென்றால் உலகின் எங்கோ ஓரிடத்தில் உருவாக்கப்படும் சித்திரக்கதைப்பொக்கிக்ஷங்களுக்கு தென் தமிழ்நாட்டில் இப்படிப்பட்டதொரு அருமையான ரசிகர் பட்டாளம் இருக்குமா என்ன...? ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள் “Die Hard Fans" - என்று, அப்படிப்பட்ட நம் காமிக்ஸ் சேகரிப்பாளர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

இழப்பின் வலி:
     காமிக்ஸ் சேகரிப்பாளர்கள்,அது தொடர்புடைய நபர்களைத்தவிர வேறு நபர்களிடமிருந்து  காமிக்ஸ் பெரும்போது, நான் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி புத்தகம் எங்கிருந்து கிடைத்தது என்பதாகத்தான் இருக்கும்.எதற்காக கூறுகிறேனென்றால் “இழப்பின் வலி”-யை நான் நன்கறிவேன். ஒருமுறை எனது நூலக நண்பரொருவரிடம் எனது காமிக்ஸ் சேகரிப்பு அது தொடர்பான சில விக்ஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது அவருடைய நண்பரொருவர் காமிக்ஸ் சேகரிப்பாளரென்றும்,தற்போது புத்தகங்கள் தொடர்ந்து சேகரிக்கிறாரா என தெரியவில்லை எனவும் கூறினார். நானும் எதேச்சையாக “காமிக்ஸ் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைத்தால் தொடர்பு கொள்ளுங்கள் சார்,எனக்கு கட்டுபடியான விலை கிடைத்தால் வாங்கிக்கொள்கிறேன்” எனவும் கூறினேன்.எவ்வளவு தருவீர்கள் என்றவருக்கு பதிலாய் “அது புத்தகங்களைப்பொறுத்தது” என கூறிவிட்டு நகர்ந்தேன். வழக்கமான வேலைகளில் நாட்கள் நகர ஒரு புதிய எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு...! அழைத்தவர்  “நூலக நபர்” (அவருக்கு தொலைபேசி எண்ணைக்கொடுக்கத்தெரிந்த எனக்கு அவருடைய எண்ணை சேமிக்க தோணவில்லை - அன்றிலிருந்து இன்றுவரை புது நபர்கள் நட்பு ரீதியாக அறிமுகமாயின் முதலில் செய்வது தொலைபேசி எண் பரிமாற்றம் மற்றும் சேமிப்பு).
   
     அழைத்தரை ஒரு சில நொடிகளில் இனம் கண்டு “ஓ...! சார் எப்படி இருக்கீங்க?” என்ற வினவலுடன், “என்ன திடீர்னு போன் பண்ணிருக்காப்ல - எதாவது காமிக்ஸ் கிடைச்சிருக்குமோ...!” என்று நினைத்து முடிப்பதற்குள், “சார், காமிக்ஸ் கேட்டீங்கள்ள? ஒரு 30-35 புக் இருக்கு சார்...! வேணுமா...?” என்றார். நமக்கு சொல்லவும் வேண்டுமா என்ன “எப்ப சார்? இன்னைக்கு சாயந்திரம் பார்க்கலாமா...?” என்றேன். அவரும் சரி என்று பணத்திலேயே குறியாக இருந்தார். அன்றைய மாலை அவரை சந்தித்து புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். எவ்வளவோ போராடிப்பார்த்தும் புத்தகத்தின் மதிப்பைவிட  சற்று அதிகமான பணத்தைப்பெற்றுக்கொண்டே நகர்ந்தார் “நூலக நபர்” (வழக்கம்போலவே அதிக விலை கொடுத்து புத்தகங்கள் வாங்க வேண்டிய நிலை - புத்தகங்களை பார்ப்பதற்கு முன்னரே விலையை கூறியிருந்தால் கூட சற்று நிதானித்திருக்கலாம், புத்தகங்களைப்பார்த்த பின்னர் ஒரு காமிக்ஸ் காதலனுக்கு காமிக்ஸா...? - காசா...? எது முக்கியமாக தோன்றியிருக்குமென்பதை கருவிலிருக்கும் குழந்தைகூட கூறிவிடும்.ஹும்ம்ம்...!)

     செலவழித்தது கணிசமான தொகை என்றாலும், அப்புத்தகக்குவியல் ஏற்படுத்தும் மகிழ்ச்சிக்கு ஈடு-இணை ஏதுமில்லை என்பது திண்ணம்.ஆனால் பிரச்சனையின் ஆரம்பமே இந்தப்புள்ளிதான் என்பதை அப்போது நான் அறிந்திருக்க நியாயமில்லைதான்.மனிதனுக்கு சபலம் எங்கே விட்டது, ஓரிரு வாரங்களில் அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அலைபேசி எப்போதும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.நான் அவரை கடைசியாக சந்தித்ததும்,பேசியதும் புத்தக பரிமாற்றத்தின்போதே.அன்றிலிருந்து மிகச்சரியாக ஆறு வாரங்கல் கழித்து “நூலக நபரி”-ன் பெயரைக்கூறிக்கொண்டு ஒரு புதிய அலைபேசி எண்ணிலிருந்து அழைப்புவந்தது. பேசிய நபரின் வார்த்தைகளைக்கேட்டு சற்று அதிர்ந்தேதான் போனேன், “என்ன சார்...? என் ஃபிரெண்ட் கிட்ட ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணிங்கன்னுதான் புக் கொடுத்தேன் ஒன்றை மாசமாகுது அவனும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேன்றான், உங்ககிட்டருந்தும் புக் வர மாட்டேங்குது,நான் உங்க வரைக்கும் வர வேணாம்னுதான் நினைச்சேன் - என்ன பண்றது எல்லாமே கக்ஷ்டப்பட்டு சேர்த்து பாதுகாக்குற பொக்கிக்ஷம்...!” எனப்பேசிக்கொண்டே போனவரிடம்  “சார்? ஒரு நிமிக்ஷம்...! என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது...?” என்க, “ஏங்க! என்ன கேள்விங்க இது? நமக்கு முன்ன-பின்ன தெரியாது, என் ஃபிரெண்ட்தான் கொடுத்தான், ஏன்? புக்குக்கு சொந்தகாரன் போன் பண்ணான்னு தெரிஞ்சிருந்தா போனை எடுத்திருக்க மாட்டீங்களா...?” என்றவரிடம் குழப்பமும்,கோபமுமாக “சார் உங்க ஃபிரெண்ட் நம்பர் கிடைக்குமா?” எனக்கேட்க அவர் இன்னும் சூடாகி “நானே அவனைபிடிச்சு உங்க நம்பர் வாங்குறதுக்குள்ள போதும்-போதும்னு ஆய்டுச்சி, ஏதோ கேட்காதவன் புக்கு கேட்கிறானேனு கொடுத்தா ஒரு ஃபிரெண்ஸிப்பையே கட் பண்றளவுக்கா நடந்துகிறது...!” எனக் கூறியவரிடம்  “சார்! நான் கொஞ்சம் வெளியில இருக்கேன், நாளைக்கு காலைல நானே கால் பண்றேனே...!” எனக் கூற, அவரும் “சரி...! சரி...! நாளைக்கு கால் பண்றது இருக்கட்டும், நாளைக்கே புக்க கொடுக்கிற வழிய பாருங்க...!” எனக்கூறி போனை வைக்க எனக்கு தலை கிறுகிறுத்தது.
   
     பணம் போனால் போகட்டும், ஆனால் காமிக்ஸ்...? நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் என அவர் மீதும், இப்படி ஏமாளியாகி விட்டோமே என எனக்கே என் மீதும் ஆற்றாமையுடன் கூடிய கோபம் ஏற்பட்டது.ஏதேதோ சிந்தனைகள் மனதையும்-புத்தியையும் ஆக்கிரமித்து என்னை சுழலடித்துக்கொண்டிருந்தன.சிறிது நேரம் செல்ல-செல்லத்தான் ஒரு விக்ஷயம் எனக்கு பிடிபட ஆரம்பித்தது, அவரும் நம்மைப்போல ஒரு காமிக்ஸ் சேகரிப்பாளர் தானே அவருடைய நிலையில் நான் இருந்திருந்தால் இன்னும் மோசமாக நடந்துகொண்டிருப்பேன். புத்தகம் நமதில்லை என்றாகிவிட்டது, விடிந்ததும் முதல் வேலையாக புத்தகத்தை உரியவரிடம் ஒப்படைத்து விட வேண்டுமென முடிவுசெய்து உறங்கச்சென்றேன் - மோசமானதொரு இரவு.
   
     இன்றைய நாள் எனக்கு வழக்கமானதொரு நாளாக இருக்கப்போவதில்லை என்றாலும் - வழக்கமான பேப்பர் போடும் பையனின் சத்தத்தில் கண்விழித்த எனக்கு நேற்றிரவு நடந்த சம்பாக்ஷணைகள் அனைத்தும் கனவு போல் தோன்ற, மறுநொடி வந்த தொலைபேசி அலைப்பு அது கனவில்லை என்பதை பறைசாற்றியது.  “புக்க தான் கொடுக்குறோம்னு சொல்லியாச்சுல்ல அப்பறம் ஏன் இவ்ளோ காலைலே போன் பண்றார்...!” என எண்ணிக்கொண்டே போனை எடுத்து  “ஹலோ...! சொல்லுங்க சார்...?” என்க, மறுமுனையிலிருந்து எந்த பதிலும் இல்லை. “ஹலோ...! ஹலோ சார்...!” மறுபடியும் எந்த பதிலும் இல்லை. போனை அனைத்து, பின்னர் நானே அவருக்கு கால் செய்தேன் - அழைப்பு துண்டிக்கப்படும் நேரத்தில் போனை எடுத்த அவர் “தம்பி...! என்னை மன்னிசிடுங்க தம்பி...!” எனக்கூற,இதை சற்றும் எதிர்பார்க்காத  நான் ஸ்தம்பித்துப்போனேன். “சார்! எதுக்கு சார் பெரிய வார்த்தையெல்லம் பேசிக்கிட்டு, அது உங்க புக்.இடையில ஏதோ குழப்பம் நடந்துருச்சு, அதுக்காக நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும்...!? என்க, அவரும் விடாக்கண்டனாய் “விடுங்க தம்பி தப்பு பண்ணவனே அவன்பாட்டுக்கு கெடக்குறான், நாம மாறி-மாறி மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்கோம் சரி அதை விடுங்க,என்ன இருந்தாலும் நான் அப்படி பேசி இருக்க கூடாதுதான் இல்லையா...?” என்றவரிடம்  “சார், இன்னைக்கு உங்களைப்பார்த்து புக்க கொடுத்தடறேன் சார்,நாளைக்கு பெங்களூர் போறேன் வர இருபது நாள் ஆகும், அதுவுமில்லாம இன்னைக்கு நான் ஃப்ரீயாதான் இருக்கேன்...!” என்க “சரி தம்பி புக்கெல்லாம் படிச்சுட்டீங்களா..?” என்றார். “இல்ல சார்! கொஞ்சம் படிச்சுருக்கேன் - கொஞ்சம் பொரட்டிருக்கேன்...!” என்றேன். (இப்படி ஆகும்னு யார் நினைச்சது,நம்ம புக் எப்ப வேணும்னாலும் படிசுக்கலாம்னுதான தோனும் - என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.). “சரி தம்பி...! நீங்க படிச்சிட்டு மொத்தமாவே கொடுங்க,ஆனா கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க...!” என்றார். பேருக்கு சரி என்று தலையாட்டி வைத்தேன்.

     இருபது நாட்களின் கடுமையான வேலைப்பளு அவர் கொடுத்த புத்தகங்களின் வாசிப்பிலும், அவருடனான அலைபேசி உரையாடலிலும் எவ்வாறு கழிந்தது என்றே தெரியாமல் கழிந்தது.ஒருவழியாக அவரை சந்திக்கும் நாளும் வந்தது, எப்படியோ நிகழ வேண்டிய சந்திப்பு இப்படி அமைந்தது. அவருடைய புத்தகங்களுடன் அடையார் நூலகத்தின் வாசலில் காத்துக்கொண்டிருந்தேன். நெடுநாள் பழகிய நண்பனைப்பிரிந்து பின்னர் சந்திக்க நேர்ந்திடும் போது அதில் ஒரு அழகியல் இருக்கும் அவ்வாறான மனநிலையில் தான் இருவரும் இருந்தோம் என்றே கூறலாம். முன்/பின் சந்தித்ததில்லை என்பதால் குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவரின் குரலை விட அவருக்கு வயது அதிகமென்பது அவரை பார்க்கும்போது தான் புலப்பட்டது. இருவரும் நெடுநேரம் உரையாடிக்கொண்டிருந்தோம் (அதையெல்லாம் விவரித்தால் அது அவருடைய சுயபுராணக்கதை ஆகிவிடுமென்பதால், நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் விவரிக்கிறேன்). அவருடன் பேசியதிலிருந்து அவர் வாழ்க்கையில் காமிக்ஸ் மட்டுமல்லாமல் பெரும்பாலான விஷயங்களில் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து இருக்கிறார் என தெரிந்தது. நெடுநேர உரையாடலின் இறுதியில் விடைபெரும்போது அவருடைய புத்தகங்களை அவரிடம் ஒப்படைத்தேன். புத்தகம் தாங்கிய பையை வாங்கிய அவர் ஏதோ சொல்ல யத்தனித்து பின் தயங்கியதை கண்டு “சொல்லுங்க சார்...!” என்றேன், “இல்ல தம்பி, வாழ்க்கைங்றது சாதரண விக்ஷயம் கிடையாது.இப்ப என்ன எடுத்துகங்களேன் எல்லாம் இருந்தும் ஒன்னும் இல்லாத மாதிரினு சொல்லுவாங்கல்ல அதுக்கு சிறந்த உதாரணம் நாந்தான்.புரியிர மாதிரி சொல்றேன் கேட்டுக்கங்க, நான் உங்ககிட்ட காட்டுன கோவம்,பாசம் எல்லாத்துக்கும் காரணம் நான் கிடையாது-என்னோட தனிமைதான். ரெண்டு பொண்ணு ஒரு பையன் எல்லாரையும் செட்டில் பண்ணி விட்டுட்டேன். பொண்ணுங்க அவங்கவுங்க வேலையப்பார்த்துட்டு இருக்காங்க,பையன் US-ல செட்டில் ஆய்ட்டான் அப்பப்ப பேசுவான்.என் மனைவி மூனு வருசத்துக்கு முன்னாடி போய்ட்டா...!” என்றவாறு கண் கலங்கினார். சிறிது நேர அமைதிக்குப்பின்னர் தொடர்ந்தார் “இதுக்குமேல இழக்கிறதுக்கு என் கிட்ட ஒன்னும் இல்ல தம்பி...! ஒரு விசயம் மட்டும் சொல்றேன் தம்பி புள்ளைங்களுக்கு பாசம்னா என்னனு புரியவச்சு வளங்க தம்பி” என்றவாறு புத்தகப்பையை கையில் வைத்து அழுத்தினார். “சார்...!” என்றேன் இது  “என்கிட்ட இருக்கிறத விட உங்ககிட்ட இருந்தா அதுக்கு ஆயுள் அதிகம்...!” என்றவாறு விடுவிடுவென நடையைக்கட்டினார்.

     காமிக்ஸ் சில நேரங்களில் வாழ்க்கையையும் கற்றுக்கொடுக்கின்றது என நான் உணர்ந்த தருணம் அது.

அன்றும் / இன்றும்:
                    நமது பால்யத்தை மீட்டெடுக்க ஒரு “காலயந்திரம்” கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், ஆம் நண்பர்களே நாம் உண்மையிலேயே அதிர்க்ஷ்டசாலிகள் தான் நாம் “காமிக்ஸ்” எனும் காலயந்திரத்தில் பயணம் செய்து நமது நினைவுகளின் மூலம் பால்யத்தை மீட்டெடுக்கிறோம்.அதற்காகவே பெரும்பான்மையான சேகரிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. அதிகபட்ச காமிக்ஸ்கள் விற்பனை செய்யப்பட்ட அன்றைய நாளில் சேகரிப்பின் நிலையும்,இந்நாட்களில் சேகரிப்பின் நிலையும் எனது பார்வையில்...!

  • அன்றைய காமிக்ஸ் வாசகர்களை 1970 முதல் - 1980 முதல் - 1990 +1995 முதல்  என பொதுவாக மூன்று வகையாகப்பிரிக்கலாம். தற்போதும் விடாமல் காமிக்ஸ் வாசிப்பது-வாங்குவது இக்காலகட்டத்தினரே.இவர்கள் “காமிக்ஸ்” என்ற ஒரு வட்டத்திற்குள் கட்டுண்டு கிடக்காமல் சிறுவர்மலர் முதல் பொன்னியின் செல்வன் வரை பிரித்து மேயும் புத்தகப்புழுக்களாக சிக்குண்டு கிடப்பவர்கள்.புத்தகம் மற்றும் ஏனைய சில விளையாட்டுக்களைத்தவிர வேறு பொழுதுபோக்கு இல்லாத காரணமும் ஒன்று.
  • இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்கா பஞ்சம்.அதையும் தாண்டி, தங்கள் வாரிசுகளை காமிக்ஸ் உலகிற்கு அழைத்துவர பெரும் பிரயத்தனப்படுவதும் இவர்களே.

  • காமிக்ஸ் உலகின் பொற்காலம் என கருதப்பட்ட 1980-களில் நாலாபக்கத்திலிருந்தும் முளைத்த காமிக்ஸ் பதிப்பகங்களின் மூலம் பலதரப்பட்ட காமிக்ஸ்கள் வெளிவந்தன. இன்றைய வாசகர்களில் 80 சதவீதத்தினர் அன்றைக்கு அரைநிஜார் போட்ட பள்ளி சிறார்களே.எனவே தொடர்ச்சியாக வாங்கும் புத்தகங்களைத்தவிர வெளியான பெரும்பாலான புத்தகங்கள் பட்ஜெட் காரணமாகவும், பள்ளிப்படிப்பு பாதிக்கும் என பேற்றோர்களின் அறிவுறுத்தலாலும் வாங்காமல் தவிர்க்கப்பட்டன.
  • அன்றைக்கு தவறவிட்ட ரூ.60 /- பைசா மதிப்புள்ள புத்தகங்களை இன்று ரூ.1000 கொடுத்து வாங்க தயாராக இருப்பதும் இவர்களே.என்ன இங்கு மட்டும் விற்பவருக்கும்-வாங்குபருக்கும் ஒரு சிறிய புரிதல் இருக்க வேண்டியது அவசியமாகிறது.


  • காமிக்ஸ் பரிமாற்றத்திற்கும், விற்பனைக்கும் ஆசிரியரே “BOOK MARKET” பகுதியினை ஆரம்பித்து வாசகனுக்கு உதவினார்.என்ன கடிதம் எழுதிவிட்டு காத்திருக்க வேண்டும்.பதில் கிடைக்க ஒரு வாரமென்ன ஒரு மாதம்கூட ஆகலாம்.பின்னர்தான் புத்தகம் நமக்கா இல்லையா என்பதே தெரியவரும்.இதைத்தவிர பெரும்பாலான வாசகர்களும் ஒருவருக்கொருவர் கடிதத்தொடர்பில் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை ஆரோக்யமான முறையில் பரிமாறிக்கொண்டிருந்ததையும் நானறிவேன்.
  • இன்றைய நவீன காலகட்டத்தில் Mobilephone, Facebook Group, Whatsup Group என அனைத்தையும் நம் வாசகர்கள் சிறப்பாகவே பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் பெரும்பாலான புதிய வாசகர்கள் பயனடைகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. (புத்தகம் விற்பனை செய்பவர்கள் புத்தகங்களுக்குரிய நியாயமான விலையில் விற்பனை செய்வது நலம் / வாங்குபர்களும் அடிமாட்டு விலைக்கு புத்தகங்களை விலை பேசுவதையும் தவிர்க்கலாம்.) புத்தகங்களின் பராமரிப்பு செலவிற்கே மாதம் ஒரு தொகையாகும் என்பது அனைவரும் அறிந்ததே.


  • புத்தகங்களின் வெற்றி-தோல்வி பற்றிய நிலவரம் வெளியிடும் நிறுவனத்தின் அடுத்த புத்தகம்வரும்போதுதான் தெரியவரும்.
  • இன்றோ புத்தகம் வெளியான ஒரிரு நாட்களில் முழு விமர்சனமும் அனைவராலும் பகிரப்பட்டு பிரிண்டிங், மொழிபெயர்ப்பு, சித்திரத்தரம், விலை, கதையமைப்பு என அக்குவேர்-ஆணிவேராக பிரித்து மேய்ந்துவிடுகின்றனர் நம் வாசகர்கள். இது ஆசிரியரின் நேரடிப்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தக்கதைத்தொடரை தொடர்வதா அல்லது முழுக்கு போடுவதா என உடனடி முடிவும் எடுக்கப்படுகின்றது.இது நல்ல மாற்றமே என்றாலும், ஒரு சில கதைத்தொடர்கள் ஓரிரு ஆல்பங்களுக்குப்பின்னரே சூடு பிடிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

  • எத்தணையோ நிறுவனங்கள் காமிக்ஸ் இதழ்களை வெளியிட்டாலும் முத்து காமிக்ஸ் தரத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியது கண்கூடான உண்மை.என்ன ஒரு விசயம் அடுத்த மாதம் எந்த தேதியில் புத்தகம் வருமென்பது படைத்தவனே அறியாதது. பல மாதங்கள் புத்தகமே வெளிவராமல் இருந்ததுமுண்டு. புத்தகம் வந்திருக்கிறதா என்பதையறிய கால் செருப்புதேய கடைக்கு அலையவிட்ட பெருமை சிவகாசி சிங்கமுத்து நிறுவனத்தையே சேரும். 
  • வண்ணத்தில், மாதம் தவறாமல், பல நிறுவனங்களின் கதைகள், பல்வேறுப்பட்ட நாயகர்கள் என போட்டியே இல்லாமல் சிங்கம் சிங்கிளாக வலம் வந்து நம்மை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. "PRINTRUN" - யை அதிகப்படுத்தி விலையை மட்டுப்படுத்தினால் வாசகன் இன்னும் மகிழ்வான்...!

  • அன்றைய விமர்சனம் கடிதம் வாயிலாக சென்றடைந்து,புத்தகம் வாயிலாக அனைவரின் பார்வைக்கு வரும்.அது காமிக்ஸ் வாசகர்களைத்தாண்டி அவர்களின் வீட்டினர் பார்வைக்கு செல்வதுகூட அரிதானது. மேலும் விமர்சனமென்பது புத்தகங்களின் மீது மட்டுமே இருக்கும்.
  • இன்றைய விமர்சனமென்பது "SOCIAL MEDIA"-க்களில் பகிரப்படுகிறது. இவ்விமர்சனங்கள் புத்தகங்கள் மீது மட்டுமல்லாமல் சில நேரங்களில் தனிமனித தாக்குதல்களாகவும் மாற்றம் பெருகின்றன.சில பதிவுகளுக்கு இடப்படும் "COMMENT"-கள், நாம் பொதுவெளியில் உரையாடுகிறோம் என்பதையும் தாண்டி அவரவரின் குணாதிசயத்தை பிரதிபலிப்பதாக இருந்துவிடுகிறது.ஒருவர் மணம் புண்படும்படியோ அல்லது தவறான வார்த்தைபிரயோகிப்போ நமது தரத்தை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு ஒப்பானதாகும். போர் புரியும் வேலையில் கூட அதற்கான ஒழுக்கத்தை கடைபிடிப்பது நமது தமிழர் நாகரிகம் மற்றும் பண்பாடு.

  • காமிக்ஸ் சேகரிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், என்ன ஒரு 10 முதல் 20 புத்தகங்கள் சேர்ந்து இருக்கும்.எடுத்து அடுக்கி வைத்து அழகு பார்த்துக்கொண்டிருப்பேன்,அம்மா கூட கேலி செய்வார்கள்.இதையெல்லாம் அடுக்க பிரத்யேகமாக இதற்கென்றே ஒரு அலமாரி செய்ய வேண்டும் என்ற ஆசை மீது கடவுளின் கருணைப்பார்வை இன்னமும் விழவேயில்லை. என்னிடம் 20 புத்தகங்கள் இருந்த போது இன்னும் நிறைய புத்தகங்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எவ்வளவு இருந்ததோ, இன்று அதைவிட இன்னும் அதிகரித்துதான் இருக்கின்றது (அதற்காக உங்களிடம் எவ்வளவு புத்தகங்கள் உள்ளது என்று கேட்கக்கூடாது). 
  • இன்றைய காமிக்ஸ் வாசக வட்டம் என்பது பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபரில் ஆரம்பித்து - ஃபாரின் சுற்றுலா போய் வரும்போது காமிக்ஸ் வாங்கி வருபவர்களையும் உள்ளடக்கியது.தற்போதைக்கு அவரவர் வசதிக்கேற்ப அவரவர் பொக்கிக்ஷங்களை  வாங்கியும்,பாதுகாத்தும் வருகிறோம்.
பதிவு நீண்டுகொண்டே செல்வதால் இப்பதிவின் தொடர்ச்சி வரும்காலங்களில் இடப்படும்.இப்பதிவின் தொடர்ச்சி சில ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியத்தாய் இருக்கும் என்பதை மட்டும் சொல்லி தற்போது விடைபெருகிறேன்.அதுவரை "HAVE A LOT FUN WITH COMICS".

குறிப்பு: நண்பர்கள் வெறும் மெளனப்பார்வையாளர்களாக மட்டுமல்லாது நிறை/குறைகளையும் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.நண்பர்களுக்கு நன்றிகள்.
  

Saturday, August 5, 2017

பெல்ஜியம் to ஈரோடு...! (ஒரு மினி பயணம் & பதிவு)

நண்பர்களுக்கு வணக்கம்,
ஒருவழியாக “இரத்தக்கோட்டை”யும் வெளிவந்துவிட்டது (அன்பளிப்பாக அறிவித்த “இரத்தக்கோட்டை” புத்தகம் எங்கே என்கிற நண்பர்களின் கேள்விகள் என் செவிகளை எட்டாமலில்லை, இந்த வார இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு உண்டாகும்.) ஈரோட்டில் நண்பர்கள்-ஆசிரியர் சந்திப்பு இனிதே நடைபெற்றது என்பதை அறியப்பெற்றோம்.இரத்தப்படலம், டெக்ஸ் வில்லர் ஒருசில மறுபதிப்புகள் பற்றிய அறிவிப்புகள் என விழா சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.இருந்தாலும் “வேதாளர்” பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லையே என்கிறதொரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு பெல்ஜிய காமிக்ஸ் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்நாட்டில் இப்படிப்பட்டதொரு  ஏகபோக ரசிகர்பட்டாளம் இருக்குமென்பதை அதன் படைப்பாளிகளே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்நேரத்தில் “என் பெயர் டைகர்’’  இதழுக்காக நான் முயற்சித்த அட்டையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இரத்தக்கோட்டையை பற்றிய ஆசிரியரின் கருத்துடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன் கதையைப் பொறுத்தவரை - உங்களில் அநேகப் பேர் இதனை மனப்பாடமாக ஒப்பிக்கக் கூடியவர்கள் என்பதால் நான் பில்டப் என்று மொக்கை போடப் போவதில்லை ! மாறாய் - வண்ணத்தில், இந்த பெரிய சைசில் - உங்களின் ஆதர்ஷ நாயகரை ரசிக்கும் அனுபவத்தை இயன்றமட்டுக்கு நம்மோடு பகிர்ந்து கொள்ள மட்டுமே கோரிடுவேன் ! இந்த சாகசத்துக்குமே ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியுள்ளது என்பதை மட்டுமே நீங்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பேன் !

இந்த மெகா சாகசத்தை முதன்முறையாக ரசிக்கவிருக்கும் நண்பர்கள் நிச்சயமாய் மச்சக்காரர்களே ! அன்றைக்கு நியூஸ் பிரிண்டில் - கச்சா முச்சா என்ற frame அமைப்புகளில், கருப்பு-வெள்ளையில், பிரித்துப் பிரித்து நாங்களெல்லாம் ரசித்ததை இன்று நீங்கள் அழகாய், தரமாய், 'ஏக் தம்மில்' வாசிக்கப் போவது நிச்சயமாய் ஒரு அதிர்ஷ்ட அனுபவம் என்பேன் ! Happy Reading  guys !!”இதழைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவொரு மினி-பதிவே, சுவாரஸ்யத்துடன் மேலும் சில தகவல்களை சுமந்து வரும் அடுத்த பதிவுடன் நண்பர்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன். அதுவரை Happy Reading Folks...!.

Saturday, March 11, 2017

இரத்தக்கோட்டை


நண்பர்களுக்கு வணக்கம், கேப்டன் டைகர் கதைவரிசையில் அதகள வெற்றியடைந்த “இரத்தக்கோட்டை” தொடரின் வண்ணமறுபதிப்பு பற்றிய அறிவிப்பின் பிரதிபலிப்பே இந்த பதிவு...!

   “இரத்தக்கோட்டை” 2004 -ம் ஆண்டு புத்தாண்டில் 5-பாகங்கள் கொண்ட இதழின் முதல் இதழ் வெளியானது.பின்னர் அதனைத்தொடர்ந்து மூன்று இதழ்கள் சில/பல மாத இடைவெளிகளில் வெளியாக இறுதிப்பாகம் மட்டும், மற்றொரு இதழின் இடைச்செருகளுக்கு பின்னர் வெளியானது.

  1. இரத்தக்கோட்டை _________(வெளியீடு நிர்:294).
  2. மேற்கே ஒரு மின்னல்_____ (வெளியீடு நிர்:295).
  3. தனியே ஒரு கழுகு________(வெளியீடு நிர்:296).
  4. மெக்ஸிகோ பயணம்____(வெளியீடு நிர்:297).
  5. செங்குருதிப்பாதை_____(வெளியீடு நிர்:299).



    கிட்டத்தட்ட  பதிமூன்றரை வருடங்களுக்கு பிறகு மறுபதிப்பு காணப்போகும் இதழிது.மாத மாதம் காத்திருந்து படிப்பது சிலருக்குப்பிடிக்கும், சிலருக்கு ஒட்டுமொத்தமாக படிப்பது பிடிக்கும்.நான் இரண்டாவது வகையைச்சேர்ந்தவன் என்பதாலோ என்னவோ எனக்கு 5-இதழ்களும் மொத்தமாகவே வாசிக்கக்கிடைத்தது.மாத மாதம் புத்தகம் வாங்காமல் புத்தக விழாக்களில் வாங்கத்தொடங்கிய நாட்களவை.வாங்கி வைத்த புத்தகங்களை படிக்கின்றோமோ இல்லையோ காமிக்ஸ்-டைம் / ஹாட்லைன் - யை முதலில் வாசித்துவிடுவது அந்நாளைய வழக்கம்.அது இன்றும் தொடர்கின்றது.பண்டலாக வாங்கிய புத்தகங்களைப்பிரித்து புத்தகங்களை ஒரு பார்வையிட்ட பின்னர் காமிக்ஸ்-டைம் படித்த  பின்னர்தான் தெரிந்தது டெக்ஸ் உட்பட நிறைய புத்தகங்கள் ரூ.10/- விலையில் பிரிக்கப்பட்டு, இரண்டு,மூன்று அல்லது இரத்தக்கோட்டை போன்று 5 பாகங்களாக வெளிவந்துள்ளதென்று.முத்து காமிக்சின் வரலாற்றில் முதன்முதலில் இரண்டு பாகங்களாக பிரித்து வெளிவந்த ”தங்கக்கல்லறை” மூலம் அதற்கான சிறப்பும் திருவாளர் டைகரை சென்றடைகின்றது.ஒட்டுமொத்தமாக முழுக்கதையையும் வாசித்தவர்களாகட்டும் அல்லது காத்திருந்து ஒவ்வொரு பாகங்களாக வாசித்தவர்களாகட்டும்,மேலும் ஓரிரு பாகங்கள் கிடைக்கப்பெற்று இன்னபிற பாகங்களை தேடிக்கொண்டிருப்பவர்களாகட்டும், இவையெதிலும் சேராமல் இத்தொகுப்பை புதிதாக வாசிக்க காத்திருப்பவர்களாகட்டும் அனைவருக்கும் ஒரு அருமையான சித்திர விருந்து காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
   இந்த அறிவிப்பைக்கொண்டாடும் வகையிலும்,நம் நண்பர்களுக்கான சகாயமாகவும் “Tamil Comic Series" சார்பாக ஒரு சிறிய அன்பளிப்பை அளிக்க முன்வந்துள்ளோம்.நீங்கள் செய்ய வேண்டியது இப்பதிவிற்கான ஒரு "COMMENT" இட வேண்டியதே.என்ன Comment இடலாம் என தீவிர யோசனை தேவையில்லை. “RESERVED FOR BLUEBERRY" என்பதைக்கூட தாங்கள் உபயோகிக்கலாம். பின்னூட்டமிட்டுள்ள அனைவரது பெயரும் தொகுக்கப்பட்டு  குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசு எந்த ஊராக-நாடாக இருந்தாலும் குரியரில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.பரிசை பெரும் நபரது புகைப்படம் / பரிசுடன் (நபரின் விருப்பம் மற்றும் அனுமதியைப்பொறுத்து) மேற்கொண்ட நமது பதிவுகளில் வெளியாகும்.ஏப்ரல் 30,2017 இரவு 12:00 மணி வரை வரும் "COMMENT"-கள் மாத்திரமே இப்பரிசிற்கு தகுதியானவைகளாக ஏற்றுக்கொள்ளப்படும். மே 01,2017 மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.நேரம் கிடைப்பின்  குலுக்களின் வீடியோ பதிவு நமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.கடைசி வரைக்கும் அந்த பரிசு என்னனு சொல்லவே இல்லையே என்ற நண்பர்களின் Mind Voice-கேட்காமல் இல்லை. வெற்றிபெரும் ஒரு நபருக்கு இரத்தக்கோட்டை  மேற்கானும் 5-இதழ்கள் கொண்ட செட் அனுப்பி வைக்கப்படும்.மேலும் ஒரு புதிய பதிவுடன் நண்பர்களைச்சந்திக்கும் வரை...! Have a lot fun with COMICS...!

பின்குறிப்பு: ஏற்கனவே புத்தகம் வைத்திருக்கும் நபர்கள். COMMENT-னைத்தவிர்த்து புத்தகம் இல்லாதவர்கள் பயன்பெற வழியமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Saturday, February 25, 2017

“காமிக்ஸ்” எனும் காலயந்திரம்

      நண்பர்களுக்கு வணக்கம், மீண்டுமொரு பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...! “காமிக்ஸ்” எனும் ஒற்றை வார்த்தையின் பலம் நாம் அறியாததில்லை.சித்திரக்கதைகளின் மீதான மையல் உச்சத்திலிருந்த காலகட்டமான எண்பதுகளில் ( - 1980’s +) பிறந்து, சித்திரக்கதையுடனே வளரும் வாய்ப்பை நமக்களித்த இறைவனுக்கு நன்றிகள்.இந்த ஒற்றை வார்த்தைக்குள்தான் எத்தனை எத்தனை நினைவுச்சுழல்கள்.வெறும் நினைவுகளுக்காகவே தற்போதைய மறுபதிப்புகளை(இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஸ்பைடர், ஜானி நீரோ-ஸ்டெல்லா) வாங்கும் நண்பர்கள் ஏராளம்.இன்னும் சொல்லப்போனால் நம் பால்யத்தை மீட்டெடுக்க நமக்கு கிடைத்திருப்பது காமிக்ஸ் எனும்  காலயந்திரமே.

சித்திரக்கதை (comics):
  காமிக்ஸ் - என்ற வார்த்தையை கேட்டவுடன் பெரும்பாலான நண்பர்கள் மனதில் அன்றும் இன்றும் என்ன மாதிரியான எண்ணவோட்டமிருக்கும் என சில நேரங்கலில் நினைப்பதுண்டு,அதன் விளைவே இந்த எண்ணச்சிதறல்கள்.

அன்றைய நினைவுகள்:
  1. பால்யத்தில் காமிக்ஸ் படித்த நினைவுகள்.
  2. பாக்கெட் சைஸ் புத்தகம்.
  3. அழிவு, கொள்ளை, தீமை கழகம்.
  4. ரூ.60 /- காசு புத்தகம் வாங்குவதெற்கே கக்ஷ்டப்பட்டு காசுசேர்ப்பது.(வீட்டின் சேமிப்பு உண்டியலில் கைவைத்து குட்டு வாங்கியது தனிக்கதை......!).
  5. கையில் போதிய காசு இல்லாமல் புத்தகங்களை  ஏக்கத்தோடு கடந்து சென்றது(என்னவொரு கொடுமை...!).
  6. புத்தகத்தை பரிமாற்றத்திற்கு கொடுத்துவிட்டு திரும்பப்பெற நண்பர்களிடம் சண்டையிட்டது என இழந்ததும்,பெற்றதும் சில-பல நட்புகளை.
  7. அந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் புத்தகம் வராது என்பது உலகமறிந்த விஷயம். மாதம் பிறந்து பத்து நாட்கள் தாமதமாக கடைக்கு சென்றாலும் புத்தகம் வந்திருக்காது.ஒன்று வழக்கத்தைவிட கூடுதல் தாமதம் அல்லது உள்ளூர் ஏஜெண்ட்டின் கைவண்ணம் என நாலைந்துமுறை படையெடுப்பின் பின்னரே புத்தகம் கையில் கிடைக்கும். அந்த மகிழ்ச்சியான தருணங்களை எளிதில் வார்த்தைகளில் வடித்துவிட இயலாது.
  8. கடைகளில் லயன், முத்து மற்றும் ராணி காமிக்ஸ் தவிர்த்தும் ஏகப்பட்ட நிறுவனங்களின் புத்தகங்கள் இருக்கும்.வாங்குவதற்குத்தான் பணம் இருக்காது.அதை இப்போது நினைத்தாலும் வருத்தமாகவும், தற்போது அவ்வாறு இல்லையே என்ற ஏக்கமும் மிகும்.(பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், டால்பின் காமிக்ஸ், பார்வதி சித்திரக்கதைகள், கண்மணி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், காமிக் வேர்ல்ட், தேசமலர் காமிக்ஸ், தினபூமி காமிக்ஸ், பூவிழி காமிக்ஸ்... Etc...).
  9. அந்த வயதில் ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் காமிக்ஸ் என்ற ஒரே காரணத்திற்காக கிடைக்கும் Tin Tin, Archie, Asterix's  என எல்லா புத்தகங்களையும் வாங்கி சேர்த்தது.
  10. வகுப்பறையில் புத்தகம் படித்து ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு புத்தகத்தை பறிகொடுத்தது மட்டுமல்லாமல் வாங்கியும் கட்டிக்கொண்டது.புத்தகம் கூட நினைவில் உள்ளது பாம்புத்தீவு & கடத்தல் குமிழிகள் இணைந்த Comics Classic's புத்தகம் அது.பின்னாட்களில் அந்த ஆசிரியரும் தீவிர காமிக்ஸ் ரசிகராகிவிட்டார் என்பது என்னிடமிருந்து வசிக்க வாங்கிய மேலும் சில புத்தகங்களை லவட்டிய பிறகே தெரியவந்தது.
  11. பழைய புத்தககடையில் பெட்டி பெட்டியாக காமிக்ஸ் கிடைக்கப்பெருவது பெரும்பாலான நண்பர்களுக்கு  கனவிலும், வெகுசிலருக்கு நினைவிலும் வாய்த்திருக்கும்.இக்கணவு காமிக்ஸ் ரசனையும், காதலும் கொண்ட அனைவருக்கும் பொதுவானது.
  12. அன்றைய ரூ.5/-, ரூ.7/- விலைகளுக்கே, விலை அதிகம் என்று கடிதம் எழுதி ஆசிரியரை கலங்கடித்ததும். ஸ்பெஷல் இதழ்களின் அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், என்ன...? விலை 15/- ரூபாயா என்று விழிபிதுங்கியதும் மறுக்க-மறக்க இயலுமா..?
  13. சேர்த்த புத்தகங்களை மொத்தமாக அடுக்கிவைத்து அழகுபார்த்ததோடு நில்லாமல் அதற்கென ஒரு புத்தக அட்டவணை போட்டு பராமரித்த வயதும்தான் திரும்புமோ...!
  14. பாட புத்தகங்களை பராமரிக்கிறோமோ இல்லையோ காமிக்ஸ் புத்தகங்களுக்கு பைண்டிங் செய்தது ஒரு காலம்.
  15. கல்லூரி அல்லது வேலை விசயமாக வெளியூர் சென்று திரும்பும்போது நமது காமிக்ஸ் பெட்டி காணாமல் போயிருக்கும். ஒன்று நண்பர்களின் கைங்கர்யம் அல்லது பெற்றோரின் உபயத்துடன் பழைய புத்தகக்கடை.
  16. அப்பாவிடம் புத்தகம் வாங்கிவரச்சொல்லிவிட்டு அவர் வரவை எதிபார்த்துக்கொண்டு வாசலில் காத்திருப்பதென ரசனையான நாட்கள் ஏராளம்.
இன்றைய நடைமுறை:
  1. மாதந்தோறும் நான்கு காமிக்ஸ்.படிக்கத்தான் நேரமிருப்பதில்லை.(இருந்தாலும் நாங்கெல்லாம் "COMICS" என்று போட்டிருந்தாலே புத்தகம் வாங்குற ஆளுக...!)
  2. உடனுக்குடன் புத்தகங்களைப்பற்றிய கருத்துப்பரிமாற்றம் (அட்டைப்படம் முதல் கதை,ஓவியம்,மொழிபெயர்ப்பு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து விடுதல்).
  3. முன்னெல்லாம் புத்தகம் நம் கையில் கிடைக்கும் வரை அட்டைப்படத்தைக்கூட பார்க்க முடியாது,ஆனால் தற்போது புத்தகம் நமக்கு கிடைக்கும் முன்னரே ஹாட்லைன் முதல் கதையின்  “கரு”வரை  Whatsup Group-களிலும், Facebook page-களிலும் பகிரப்படுவதால், புத்தகம் கைக்கு வரும்போதே பாதி சுவாரஸ்யம் குறைந்து விடுகின்றது.
  4. தற்போது “காமிக்ஸ்” என்பது அதன் இயல்பையும் தாண்டி நல்ல பல நண்பர்களை அடையாளம் காட்டியும்,உருவாக்கியும், பழைய நண்பர்களை  இணைத்தும் மனிதம் வளர்த்து வருகின்றது.இது சற்று மிகைப்படுத்தலாகத்தோன்றினாலும் அதுவே உண்மை.
  5.  “கருப்புச்சந்தை” - யில் பணம் பண்ணக்கூடிய அளவிற்கு நமது தமிழ் காமிக்ஸ்-ன்  வளர்ச்சி அதிகரித்திருக்கிறது.
  6. நண்பர்களிடையேயான புத்தக பரிமாற்றத்தின் மூலம் வாசிக்க கிடைக்காத புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் ஒரு ஆரோக்யமான சூழல் எழுந்துள்ளது.
  7.  கதைக்காக பழைய புத்தகங்களை தேடுபவர்களை விட, சிறுவயதில் தான் வாசித்த புத்தகம்  திரும்ப கிடைத்து விடாத என தேடும் நண்பர்கள் ஏராளம்.
  8. இணையத்தின் மூலம் வாசக நண்பர்களின் கருத்துக்கள் உடனுக்குடன் நேரடியாக ஆசிரியரையும், காமிக்ஸ் ஆர்வலர்களையும் சென்றடைகிறது.
  9. காமிக்ஸ்-க்காக செலவிடும் தொகையை வீட்டிற்கு சொல்லாமல் இருக்கும் நண்பர்களும், வீட்டிற்கு தெரிந்தே அனைத்து புத்தகங்களிலும் இரண்டு செட் வாங்கும் நண்பர்களும் நம்மிடம் உண்டு (குண்டு புத்தகங்கள் உட்பட இரண்டு செட்கள்).
  10. வெரும் கலக்க்ஷனுக்காக வாங்குவோரும்,இரவல் வாங்கிப்படித்து தீவிர வாசகரானவரும்(சமீப காலத்தில்) நம்மிடையே உண்டு.
இன்னும் எழுத ஏராளமான விக்ஷயங்கள் இருந்தாலும், நண்பர்கள் தங்கள் பால்யத்திற்கு செல்ல காலயந்திரத்தை கொடுத்துவிட்டு - தற்போதைக்கு இப்பதிவிற்கு ஒரு விடைகொடுத்து என் நிகழ்கால கெளபாய் நண்பர்களுடன் வன்மேற்கின் நீதியை மீட்டெடுக்க விரைகிறேன்.

சூப்பர் - 6:
இந்த வருடம் ரெகுலர் சந்தாவினை தவிர்த்து, மேற்கொண்டு ஆறு இதழ்கள் சூப்பர்-6 எனும் அட்டவணையின்கீழ் வெளியாகின்றது.சூப்பர் - 6 Online-ல் Book செய்திட இங்கே க்ளிக் செய்யவும்.
  1. லக்கி லூக் (ஜெஸ்ஸி ஜேம்ஸ் & ஒரு கோச் வண்டியின் கதை).
  2. மாடஸ்டி பிளைஸி (கழுகுமலைக்கோட்டை).
  3. டெக்ஸ் வில்லர் (டிராகன் நகரம்).
  4. ஜெராமையா (அறிமுகம்).
  5. சிக்பில்.
  6. கேப்டன் பிரின்ஸ் 
சூப்பர் - 6 வரிசையில் வெளியான முதல் இதழ் “லக்கி-Classics"

காலத்தைகடந்து நிற்கும் க்ளாஸிக் வரிசையில் இப்புத்தகங்கள் குறிப்பிடத்தகுந்தவை.மீண்டுமொரு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திக்கும் வரை Have a lot fun with Comics...!

Saturday, February 4, 2017

“இரத்தப்படலம்” மறக்கவியலா நினைவுகளும் - நினைவாகும் கனவுகளும்:

நண்பர்களுக்கு வணக்கம்.மிக நீண்டதொரு இடைவெளிக்கு பின்னர் ஒரு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி (Saturday, February 27, 2016 - வேதாளர் - நினைவில் நீந்தும் கனவுகள்). கண்மூடித்திறப்பதற்குள் பத்து மாதகாலங்கள் ஓடிவிட்டன.இடைப்பட்ட காலத்திலான நிகழ்வுகள் ஏதோ ஒரு யுகத்திற்கு முந்தையிலான நினைவுகளாக மட்டும் தோன்றுவது ஏனோ…! கடந்த பதினோரு மாதங்களில் பலவித சித்திரக்கதைகளின் மாயத்தில் கட்டுண்டு வருட தொடக்கத்தை தாங்கி நிற்கும் பனிபடர்ந்த பிப்ரவரியின் பொழுதுகளில் நின்றுகொண்டு, இந்த 2017-ம்  ஆண்டின் சித்திரப்புதையல்களுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு சராசரி காமிக்ஸ் ரசிகனுக்குமானது இந்த பதிவு. “தாமதப்பேய்” வரலாறாகிப்போனதும், ”மும்மூர்த்திகளின் மறுபதிப்பு வேண்டும்” என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதும், நான்கு ஆண்டுகளின் மொத்த இதழ் எண்ணிக்கை நாற்பதைத்தாண்டுமா? என்ற நிலை மாறி தற்போது ஆண்டுக்கு 46 இதழ்கள் என்றாகிப்போனதும்,ஆங்கில வண்ண இதழ்களைப்பார்த்து பெருமூச்சு விட்ட காலம் போய், நம் இதழ்களின் தரத்தைப்பார்த்து மூச்சுவிட மறந்தகாலமும் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஓன்று.முதலில் அதற்காகவும் - கடந்த ஆண்டைப்போலவும், வரும் ஆண்டு அதற்கு மேலும் சிறக்கவும் லயன் - முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.இவ்வாறான தருணத்தில்தான் இரத்தப்படலம் வண்ணமறுபதிப்பு பற்றிய அறிவிப்பு.   இரண்டாவதாக ஒரு வாசகனாக புத்தகத்தரத்தைப்பற்றியும்,நமது வாசகர் வட்டத்திற்காக ஆசிரியர் பக்கத்திலிருந்து அவர் செய்ய வேண்டிய சிற்சில சகாயங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.(*இது எனது தனிப்பட்ட கருத்துக்களே).

"இரத்தப்படலம்" வண்ண மறுபதிப்பு - ஒரு பொதுப்பார்வை ( 2018)


 இரத்தப்படலம்....! தமிழ் காமிக்ஸ் ரசிகனுக்கு பழகிவிட்டதொரு வார்த்தை.மறதியையே துணைவனாகக்கொண்டு திரியும் நம் நாயகன் - XIII’யே மறந்தாலும் காமிக்ஸ் ரசிகர்கள் மறக்க இயலாத காவியம்.தான் யார் எனத்தேடும் XIII-யை விட, லயன் காமிக்ஸ் வெளியிட்ட “இரத்தப்படலம் - The Complete Collection" ஐ தேடும் / தேடிய / தேடிக்கொண்டிருக்கும் காமிக்ஸ் ரசிகர்கள்தான் அதிகம்.அதில் நானும் ஒருவன்.கிட்டத்தட்ட காமிக்ஸ் எனும் ரசனையை விட்டு(பார்க்க:காமிக்ஸ் - ஒரு முடிவில்லா தேடல்) வெகுதொலைவில் விலகி  நின்ற காலகட்டத்தில் வெளியாகி பின்னாட்களில் அனைவரது கனவு இதழாக வலம் வந்து கொண்டிருக்கும் “இரத்தப் படலம்” எனது கைகளில் கிடைக்கப்பெற்றது 2011-ம் ஆண்டின் சென்னை புத்தகத்திருவிழாவின் போதே...! 
 இப்புத்தகத்தின் முகப்பட்டையை பார்த்ததே Youtube-ல் திரு.எஸ்.ராமகிருக்ஷ்ணன் அவர்களின் நூல் அறிமுகத்தின்போதுதான்.பார்த்தவுடனே வசீகரிக்கும் தன்மையுடன் “இந்திய காமிக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு 858-பக்க காமிக்ஸ் ஆல்பம்” என்ற கம்பீரமான அடைமொழியோடு வெளிவந்திருந்த அந்த இதழை உடனே வாங்கிப்படிக்கவேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டது.கூடவே இரத்தப்படலம் 06,07,08,09 போன்ற இடைப்பட்ட பாகங்களை வாசித்திருப்பதால் அதன் பாதிப்பும் சேர்த்து எதிர்பார்ப்பை எகிர வைத்தது.மேலும் நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு புத்தகத்தேடலின் மூலம் வாசித்த மாடஸ்டியின் “காட்டேரிக் கானகம்” காமிக்ஸ் காதல் மீதான நேசத்தை உயிர்ப்பிக்க, அதே தருணத்தில் சென்னை புத்தகத்திருவிழாவில் நமது காமிக்ஸ் விற்பனைபடுத்தப்பட்டுள்ளது என தெரியவர பொறுத்தது போதுமென்று அன்றைக்கே ஸ்டாலில் ஆஜராகிவிட்டேன்.அன்றைக்கு நமது ஸ்டாலில் நான் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை.வழக்கமாக  நம்  புத்தகங்களின் விலை ரூ.4/-, ரூ.5/-,ரூ.6/-, ரூ.7.50/- என மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.ஆனால் அவ்வாறில்லாமல், ரூ.10/- என நிர்ணயிக்கப்பட்ட விலையுடன் சற்று கடினமான அட்டையுடன் புதுப்பொலிவு பெற்றிருந்தது. புத்தகங்கள் லயன்+முத்து காமிக்ஸ் என பண்டலாக விற்பனை செய்யப்பட்டது.பெரும்பாலான புத்தகங்கள் (இரத்தப்படலம் உட்பட) விற்றுத்தீர்ந்தன.2012-ம் வருடம் ஜனவரியில் “லயன்  Comeback ஸ்பெக்ஷல்”-லுடன் கூடிய மறுவருகைக்கு இந்த புத்தகவிழாவும் ஒரு காரணமென்றே கூறலாம்.சற்றும் யோசிக்காமல் எனக்கும்,நண்பருக்குமாக இரண்டு செட் புத்தகங்கள் வாங்கினேன்.முகமறியா நண்பர்களுடன் கைகுலுக்கி,உரையாடி..., சித்திரக்கதை நேசர்களின் களிப்புணர்ந்து களிப்புற்றதும் அந்நாளே.கையில் கிடைத்த புத்தகத்தை விடாப்பிடியாக வாசித்து முடித்தது தனிக்கதை.இப்படியாக ஒவ்வொரு புத்தகத்திற்கும் சொல்வதற்கு ஒரு தனிக்கதை வைத்திருப்பான் சித்திரக்கதை பிரியன்.

இரத்தப்படலம் - The Complete Collection:
 ஆசிரியர், இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பை அறிவுத்தவுடன் வாசகர்கள் மத்தியில் பல்வேறுவிதமான கருத்துக்கள் லயன்'Blog-லும்,Whatsup Group-களிலும்,முகப்புத்தகங்களிலும் நிலவியது அனைவரும் அறிந்த ஒன்றே.இறுதியில் ஆசிரியர் தீர்க்கமாக இறுதி முடிவைக்கூறினார்.

6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில்!
         
ஒரே ராட்சஸ ஆல்பம் – 18 பாகங்களையும் இணைத்துக் கொண்டு!


இனி வாசகர்களாகிய நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.ஆசிரியரைப்பொருத்தவரை Printing-ஒன்றுதான், பைண்டிங் மட்டுமே இறுதரப்பட்டது.தீவிர காமிக்ஸ் காதலர்களைப்பொருத்தவரை கலெக்க்ஷனுக்காக இரண்டையுமே வாங்க வேண்டிய கட்டாயம்(பட்ஜெட்டில் துண்டு நிச்சயம் உண்டு).ஆனால் இப்புத்தகம் வெளியாகும்போது பெரும் வரவேற்பை பெறப்போவது உறுதி.
  • புத்தகத்தின் தரத்தில் எந்தவிதமான Compromise-யும்  வேண்டாம்.(கார்ஸனின் கடந்த காலத்தைப்போல).
  • இரண்டு செட்களும் வாங்குபர்களுக்கு ஏதேனும் சிறப்பு சலுகை அளிக்கலாம்.
  • பைண்டிங்கில் கூடுதல் கவனம் தேவை.(தற்சமயம் வெளியான ட்யுராங்கோ, லக்கி Classics இரண்டுமே சிறப்பான தரத்தில் வெளிவந்திருந்தன).
  • வரும் காலங்களில் வண்ணத்தில் வெளியாகும் புத்தகங்களை வண்ணத்திலே வெளியிடலாம்.(வண்ணத்திற்காக மறுபதிப்பு கோரிக்கை எழாமல் இருக்கவும்,அந்த Slot-களில் வேறு நாயகர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ஏதுவாக அமையும்).
  • பழைய இதழ்களின்(XIII) அட்டைப்படங்களை இவ்விதழில் நினைவு கூறலாம்.
  • பக்கங்களை Edit-செய்யாமல் பக்காவான,முழுமையான 'Complete Collection'-னாக வெளியிடலாம்.
  • ஒவ்வொரு பாகத்தின் Cover Page-க்கும் ஆங்கில ஒரிஜினல்களின அட்டைகளையே பயன்படுத்தலாம். 
XIII - ஒரு வண்ண முன்னோட்டம்:









































மீண்டுமொரு புதிய பதிவுடன் விரைவில் நண்பர்களை சந்திக்கிறேன், அதுவரை  Hava a lot fun with COMICS...! 

Saturday, February 27, 2016

வேதாளர் - நினைவில் நீந்தும் கனவுகள்

எனது பால்யம் முழுவதும் சித்திரக்கதைகளால் நிறைந்திருந்தது.எனது வாசிப்பு வாயிலின் திறவுகோள் சித்திரக்கதைகள் என்றால் மிகையாகாது.சித்திரக்கதைகளை தொடர்ந்து வாசிக்க வேண்டுமென ஆர்வமேற்படுத்தியது முகமூடி வீரர் மாயாவியே.ராணி காமிக்ஸின் “இரும்புக்கூண்டு” என்ற கதைதான் நான் வாசித்த முதல் வேதாளர் கதை. முத்து மற்றும் இந்திரஜால் காமிக்ஸ் பரிச்சயமாகாத அந்நாட்களில் முதல் அறிமுகம் “முகமூடி வீரர் மாயாவி” என்றான பின்னே, மற்ற காமிக்ஸ்களின் அறிமுக காலகட்டத்தில் மாயாவியை - வேதாளராக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.தற்போதும் என் மனதில் வேதாளரை விட அதிக ஆதிக்கம் செலுத்துவது  முகமூடி வீரர் மாயாவியே (ராணி காமிக்ஸ் மூலம் காமிக்ஸ் உலகினுள் நுழைந்த பெரும்பாலானவர்கள் இந்த அனுபம் வாய்க்கப்பெற்றிருப்பர்).எனினும் பெரும்பாலான நண்பர்கள் வேதாளராகவே இவரை அறியப்பெற்றிருப்பதால் இப்பதிவில் “வேதாளர்” என்ற பதமே பயன்படுத்தப்படும்.  தனது 80-வது பிறந்தநாளைக்கொண்டாடும் வேதாளருக்கான இந்தப்பதிவுடன் நண்பர்களைச்சந்திப்பதில் மகிழ்ச்சி.


   சித்திரக்கதைகள் எனக்கான பொழுதுபோக்காக மட்டுமல்லாது என் ரசனையையும், உலகின் மீதிருந்த என் கண்ணோட்டத்தையும், என் திறமையையும், எனக்குள்ளான ஒரு தேடலையும், இப்பிரபஞ்ச வெற்றிடங்களின் சூன்யர்த்தங்களை புரிந்து கொள்ளவும் மேலும் என்னை செம்மைப்படுத்தவும் செய்தன.இது சற்று மிகையாகத்தோன்றினாலும் யாதார்த்தத்தின் நிழலிதுவே.எனது நண்பர்கள் எனது தெருவில் நடமாடிக்கொண்டிருக்கும்போது, நான் மட்டும் அரிஸோனா பாலைவனங்களில் நீரைத்தேடி அலைந்து கொண்டிருப்பேன். இரும்புக்கையில் மின்சாரம் பாய்ந்து அரூபமாகி நண்பர்களை பயமுருத்திக்கொண்டிருப்பேன்.கெளபாய்களையும், செவ்வியந்தியர்களையும், வெயில் சுட்டெரிக்கும் ஜீவ-மரண போராட்டத்துடன் கூடிய பாலைப்பரப்பு வாழ்க்கையும், Wild West-ன் சுவாரஸ்யமான விக்ஷயங்களும் காமிக்ஸ் படிப்பவர்களைத்தவிர எத்தனைபேருக்கு பரிச்சயம் அச்சிறுவயதில்!.

   நான் எனது ஒவ்வொரு கோடைவிடுமுறைக்கும் சிவகங்கையிலுள்ள எனது தாய்மாமா வீட்டிற்குச்செல்வேன். அங்கு நானும் எனது மச்சானும் சேர்ந்து பழைய  புத்தகக்கடைகள் ஒன்றுவிடாமல் காமிக்ஸ் வேட்டை நடத்துவோம்.அவருக்கு காமிக்ஸ் மேல் நாட்டம் இல்லை என்றாலும், எனக்கு தேடிக்கொடுத்து மகிழ்வதில் அவருக்கொரு மகிழ்ச்சி.ஊருக்குச்செல்லும் போது நிறைய காமிக்ஸ் வாங்கலாம் என்ற கனவோடு அப்பாவை நச்சரித்து ரூ.50 வாங்கிக்கொண்டு கிளம்பினேன். 1996-களில்  ரூ.50 என்பது பெரிய தொகை.அந்நாட்களில் செலவைக்குறைப்பதற்காக  பேருந்து மாறி-மாறி செல்வது வழக்கம்.மதுரைபேருந்துக்காக வத்தலகுண்டு பேருந்துநிலையத்தில் காத்திருக்கும்போது கண்ணில்பட்ட புத்தகக்கடையில் ஏகப்பட்ட காமிக்ஸ்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.சரிதான் வேட்டையை இங்கே ஆரம்பித்து விடலாம் என்ற முடிவில் என்னையுமறியாமல் கடைக்குச்சென்று புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். எனக்கு
பார்வதி சித்திரக்கதைகள் பரிச்சயமானது இங்கிருந்தே.
  1. கனவா? நிஜமா?--------------------------- (பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/-
  2. டயல் 100-------------------------------------- (பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/-
  3. க்ஷீலாவைக்காணோம்-----------------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  4. அறிவின் விலை ஒரு கோடி---------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  5. அவள் எங்கே?-------------------------------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  6. பலிபீடம்----------------------------------------------------------------------( P C K ) - ரூ.04/- 
  7. தூங்காத துப்பாக்கி-------------------------------------------------------( P C K ) - ரூ.04/-
  8. நடுக்கடலில்--------------------------------------------( மேகலா காமிக்ஸ்) - ரூ.25/-
  9. ராக்கெட் ரகசியம்------------------------------------(டால்பின் காமிக்ஸ்) - ரூ. ?
  10. கொலைகார கேப்டன் -----------------------------(டால்பின் காமிக்ஸ்) - ரூ. ?


  எல்லாம் சேர்த்து ரூபாய்.50/- க்கும் மேல் வந்தது.கையில் ரூ.50/- தான் இருந்தது, மீதம் சில்லரையை மச்சான் தர மேற்குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கியாயிற்று. இவ்வாறாக அந்த வருட பயணத்தின் ஆரம்பமே சிறப்பாக இருந்தாலும்,கையில் இருந்த பணம் மொத்தமும் காலி - சிவகங்கைக்கு சென்று காமிக்ஸ் வாங்க பணத்திற்கு என்ன செய்வது...? இருக்கவே இருக்கிறார்கள் மாமாவும்,மச்சானும் என்ற எண்ணம் ஆறுதலலிக்க பயணம் தொடர்ந்தது.கையில் காமிக்ஸ் இருக்கும் பையுடனும், எப்போது மாமா வீடு வரும் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கலாம் என்ற ஆர்வமும் சேர்த்து அன்றைய பயணத்தை நெடியதாக்கியது.மாமா சிவகங்கை “ரவிபாலா-தியேட்டர்”-ன் நேரெதிரே டீக்கடை வைத்திருந்தார் நான் எப்போதும் அவருடனே இருப்பது வழக்கம்.அங்கிருந்தே ஓரிரு நாட்களில் அனைத்து புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்டேன்.முன்னெப்போதும் இல்லாமல்  தற்போது நான் அதிக புத்தகங்களை வாசிக்க பழகியிருப்பது  எனது மாமாவிற்கு வியப்பளித்திருக்க வேண்டும், கடைக்கி வருவோரிடமெல்லாம் எனது மருமகன் என பெருமையாக கூறுவார்.அனைத்து புத்தகங்களையும் வாசித்தாயிற்று...! என மச்சானிடம் கூற, அவரும் நாளை பழைய புத்தகக்கடைக்கு செல்லலாம் என்றார். அந்த “நாளை”-யின் எதிர்பார்ப்பு பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
 
   அந்த “நாளை”-யும் வந்தது, புத்தகவேட்டைக்கு கிளம்பினோம்.வழியெல்லாம் காமிக்ஸ் பற்றிய நினைவே.அந்நாட்களில் அரண்மனை வாசல் தெருவில் நிறைய பழைய புத்தகக்கடைகள் இருக்கும்.பழைய புத்தகக்கடைகளில் காமிக்ஸ் புத்தகங்கள் தேடுவதும் நம் காமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு ஆனந்தமே. நாலைந்து புத்தகக்கடைகள் ஏறி இறங்கி ஒரு இருபது புத்தகங்கள் வரை  தேற்றிய பின்னரே வீடு திரும்பினோம். பூந்தளிர் இதழ்களும் அவற்றில் அடக்கம்.அவற்றில் தற்போது என்னிடம் இருப்பது ஒன்று மட்டுமே.அட்டை இல்லாத காரணத்தினால் நிறைய புத்தகங்களை வாங்கவில்லை,அதற்காக தற்போதும் வருந்துவதுண்டு.சந்தோச நாட்களவை...!

   காமிக்ஸ் கனவில் வராத வாசகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...? அப்படி இருந்தாலும் மிக சொற்பமே இருக்க முடியும்!. பழைய புத்தகக்கடைக்குச்சென்று பார்த்தால் ஒரு அட்டைப்பெட்டியில் மொத்த காமிக்ஸும் நமக்கு கிடைப்பது போலவும்,நண்பர்கள் நமக்கு காமிக்ஸ் பரிசளிப்பது போலவும்,நம்மிடமிருந்து தொலைந்து போன காமிக்ஸ் திரும்ப கிடைப்பது போலவும் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று காமிக்ஸ் களங்களில் நாம் உலவுவது போலவும்,நாமே அந்த கதாபாத்திரமாக உலா வருவதும், கதைக்களங்கள் காட்சிகளாக விரிவடைவதும் நிகழும்.அப்படியானதொரு கனவின் நிகழ்வை சற்று கற்பனைக்கலந்து தங்களுக்கு விவரிக்கிறேன்.கனவுகள் என்றைக்குமே விசித்திரமானவைகள்தான்.அப்படியொரு விசித்திரக்கனவுதான் வேதாளர் சூப்பர்மேன் போல பறப்பது.இக்கனவை மூலமாக வைத்துக்கொண்டு என் சக நண்பர்களுக்கு நான் கூறிய கதை என் மனதில் இவ்வளவு காலம் தங்குகிறது என்றால் அது முழுக்க முழுக்க காமிக்ஸின் மகிமையே...!

சூப்பர் மாயாவி (மன்னிக்கவும் பழக்தோக்ஷம்) சூப்பர் வேதாளர்:
   22-ம் வேதாளர் தனது மகனுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்கையில் எதிர்பாராமல் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு அவரது மகன் மரணிக்கிறார்.இதனால் வேதாளரின் குடும்பமே கவலையில் மூழ்குகிறது “சாகாவரம் பெற்றவர் வேதாளர்” என்ற வரலாறு பொய்த்து விடுமோ என்ற பயம் வேதாளரின் மனதை வாட்டியெடுத்தது.  நாட்கள் வேதனையுடன் நகர்கின்றது.நிலவொளியின் வெளிச்சத்தில் மூழ்கிருந்த ஈடன் தீவின் அமைதியை கிழித்துக்கொண்டு ஓர் விண்வெளி ஓடம் மின்னற்கீற்று போல் தரையிறங்கியது.அது வேதாளர் உட்பட தீவிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.சற்று நேரத்தில் வேதாளர் வந்து சேர்வதற்கும், விண்கலத்தின் அலாரம் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. வேதாளர் விண்கலத்தை ஆராய முற்பட, தானியாங்கி செயல் முடுக்கு விசையால் தூண்டப்பட்டு அதன் கதவுகள் திறக்க உள்ளிருக்கும் பச்சிளங்குழந்தையைக்கண்டு அனைவருக்கும் ஆச்சர்யம்.(இந்த விண்கலம் ‘கிரிப்டான்’- னிலிருந்து வந்தது என்று சொல்லவும் வேண்டுமா என்ன). வேதாளரின் பராமரிப்பில் குழந்தை வளர ஆரம்பிக்க, இக்குழந்தை சாதாரணது அல்ல என வேதாளருக்கு புரிய ஆரம்பிக்கிறது.இவ்வாறாக சூப்பர் சக்தியுடன் வேதாளரின் அடுத்த வாரிசு “சூப்பர் வேதாளராக” உருவாகின்றார்.இவ்வாறாக நீண்டு செல்லும் கதை.

கனவுலகில் உதயமான “சூப்பர் வேதாளர்”.

      இப்பதிவை ஆரம்பிக்கும்போது இல்லாத - மறந்திருந்த நினைவுகள் திடீரென்று ஞாபகத்தில் முளைத்தது கொஞ்சம் புதிராகத்தான் இருக்கின்றது.கொஞ்சமே என் நினைவில் இருக்கும் சில கதைகளின் ஞாபகமீதிகள் மட்டும் என் மனத்திரையில் நிழலாடுகின்றது. அடர்ந்த கானகத்தினுள்  சிலந்தி வலை போன்ற பொறி ஆங்காங்கே காணப்படும்(நிச்சயமாக இது ஸ்பைடர் கதை அல்ல), அதில் மாட்டிக்கொண்டுவிட்டால் விடுபடுவது கடினம்.அந்த சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் எலும்புக்கூடு போன்ற ஓவியம் இன்னும் என் நினைவுகளை விட்டு அகலவில்லை(கதையின் பெயர் தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே). மற்றொரு கதையில் ஒரு வைரம் தன்னை சொந்தமாக்கி கொள்ள முயல்பவர்களை தன்னிடமிருந்து அதீத வெப்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம் காவு வாங்கும். ‘உருகும் பனிமலை’ என்ற பெயரே நினைவில் தங்கியுள்ளது.இந்தக்கதைகள் யாரிடமாவது உள்ளதா நண்பர்களே...?.இல்லையென்றால் தேடத்தொடங்குவோம்.அப்படியும் கிடைக்கவில்லையா இருக்கவே இருக்கிறது கனவு...!. காமிக்ஸ் எனும் கடலினுள் என்றைக்குமே உறங்காமல் விழித்திருக்கும் மீனினைப்போல் நம் நினைவுகள் ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கின்றன.
- நினைவுகள் நீந்தும்.


Saturday, February 13, 2016

வாடகை நினைவுகள்

மற்றுமொறு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!.இம்முறை பதிவின் சாராம்சம் நமக்கு மிகவும் பரிச்சயமான சில (வா.மு.கோமு. / எஸ்.ராமகிருக்ஷ்ணன்) எழுத்தாளர்களின் காமிக்ஸ் நினைவுகளே!. ஒவ்வொருவரின் காமிக்ஸ் நினைவுகளும் பலவித அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்,மேலும் வாசிப்பவர்களை தத்தமது பால்யங்களுக்கு இட்டுச்செல்லும் காலயந்திரம் என்று கூட  இந்த அனுபவக்கட்டுரைகளை வர்ணிக்கலாம்.அதற்காகவே இப்பதிவிற்கு “வாடகை நினைவுகள்” என்று காரணப்பெயர்.இன்றைக்கும் எனது பயணத்தில் துணைக்கு அழைத்துச்செல்வது எஸ்.ராமகிருக்ஷ்ணன் புத்தகங்களையே.இவருடைய காமிக்ஸ் நினைவுகள் பனிக்கால மத்திமபொழுதுகளின் கதகதப்பை வாசிப்பவர்களுக்கு அளிக்க வல்லது.

சனி, ஏப்ரல் 11, 2015 

வா.மு.கோமு.

இரவுக்கழுகாரின் காமிக்ஸ்.

டெக்ஸ் வில்லரின்,  “சிகப்பாய் ஒரு சொப்பனம்!



காமிக்ஸ் வெறியர்களை எனக்கு சிறுவயது முதல்கொண்டே தெரியும். கோவையில் ஒருவன் தன் இல்லத்தில் காமிக்ஸ் பலவற்றை வைத்துக் கொண்டு ஊருக்கே பத்துப் பைசாவுக்கு ஒரு நாள் வாடகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அன்று காமிக்ஸ் ஒரு ரூபாய் விலை தான் பத்துப்பேருக்கு கொடுத்தான் என்றாலே போட்ட முதல் கிடைத்து விடும். அவனிடம் பள்ளி விடுப்பு மாதத்தில் பைசா கொடுக்காமல் தூக்கி வந்து வாசித்தவன் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் என்னிடமும் அவனிடமில்லாத காமிக்ஸ் மற்றும் மாயாஜால புத்தகங்கள் இருந்தனஅவைகளை பண்டமாற்று முறையில் கொடுத்து வாசித்தேன். அவைகள் என்னிடம் இருக்க காரணம் என் அப்பிச்சி.

அவர் இந்துநேசன் நாவலில் இருந்து காமிக்ஸ் வரை கைக்கு கிடைப்பதை வாங்கி வாசிப்பவர்அவர் ராணுவத்திலிருந்து வெளிவந்து கோத்தகிரி மில்லில் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்தவர்இன்று மில்லும் இல்லை அவரும் இல்லைகாமிக்ஸில் “மஞ்சள் பூ மர்மம்” கதையை இன்றும் பேசுகிறார்கள்அதை நான் வாசித்திருந்தாலும் இப்போது நினைவில் இல்லை

இன்று சிறுவர்கள் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்திற்கு வரவே இல்லைஅவர்களுக்கு வேறு விதமான பொழுது போக்கு அம்சங்கள் பெருகி விட்டன.  பள்ளியின் பாடப்புத்தக வாசிப்புக்கு இணையாக போரான ஒன்றாக நினைக்கிறார்கள்அவர்களுக்கு மொபைல் போன்களில் விளையாட விளையாட்டுகள் குவிந்து கிடக்கின்றன.

சரி யார் தான் இப்போது காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்று பார்த்தால் அதே பழைய காமிக்ஸ் ரசிகர்கள் தான்இப்போது லயன் காமிக்ஸ் நிறுவனம் விலையைப் பற்றி கவலைப்படாமல் உயர்தர தாளில் வர்ணத்தில் புத்தகங்களை கொண்டு வருகிறதுஅவைகள் மார்க்கெட்டில் உடனடியாக தீர்ந்தும் விடுகின்றதுவர்ணத்தில் இருந்தால் மட்டுமே குழந்தைகள் வாசிக்கின்றன என்ற உண்மையை நானே நம்ம பயலை வைத்து கண்டறிந்தேன்கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் புத்தகங்களை வாசித்துப் பழகிய எனக்கு வர்ணம் ஒரு ஒவ்வாமையை தருகிறது என்பேன்அதில் ஒரு திருப்தி இல்லை.

பழைய காமிக்ஸ் ரசிகர்களே கண்ணில் தென்படும் புத்தகங்களை வாங்கி யாரேனும் கண்ணில் பார்த்தால் சிரிப்பார்களோஎன்ற பயத்தில் வீட்டில் வாசிக்க பழகியிருக்கிறார்கள்.  காமிக்ஸ் புத்தகங்களை வாசிப்பவர்களின் மனநிலையை எந்த வகையிலும் விளக்க முடியுமாஎன்றால் அது முடியாதெனத்தான் தோன்றுகிறதுஅது நிஜமாகவே ஒரு வகையான ஈர்ப்பு என்றே சொல்லலாம்காமிக்ஸ் புத்தகங்களை பிண்டு செய்து பாதுகாத்து வைத்தவர்களின் இறப்பால் அவைகள் பல பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போடப்பட்ட விசயங்களே நடந்தன.

என்னிடம் என் அப்பாவின் புத்தகங்களூக்கு இணையாக இரண்டு பெட்டிகளில் காமிக்ஸ்கள் இருந்தனராணிகாமிக்ஸ் ஆரம்பித்த காலத்தில் ஒரு இதழ் விடாமல் நான்கு வருட சேமிப்பு இருந்தனஇன்று வளைதளத்தில் சில பழைய புத்தகங்கள் பதிவேற்றப்படுகின்றன.  இப்பொழுது இரண்டு வருடகாலமாக டெக்ஸ் வில்லரின் புத்தகங்களை மட்டும் என் நண்பர் வருகையில் பெருந்துறையிலிருந்து அழைத்துச் சொல்வார்சென்று வாங்கி வரும் வழக்கத்தை வைத்திருக்கிறேன்.

ஆரம்பகாலங்களில் இரும்புக்கை மாயாவி புத்தகங்கள் என்றால் அப்படி விழுந்தடித்து சென்று வாங்கி வந்து வாசித்தவனுக்கு அவரின் கடைசிக் கதையை இரண்டு வருடம் முன்பாக ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு லயன் வெளியீட்டில் வாசித்த போது, அட சைத்தானேஎன்றே தோன்றியதுஅது அவ்வளவு போர்மீண்டும் வாசிக்க இயலாதோ காமிக்ஸ்களை என்று பயந்தேன்எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேறு காமிக்ஸ் ரசிகர் என்று எங்கோ படித்தேன்.  கடைசிக்கு லக்கி லுக் என்னால் வாசிக்க இயலாவிடினும் பயலுக்காக பிடித்து விடுவது நடந்து விடுகிறது.வாசிப்பை பயல்களுக்கு மெதுவாகத்தான் நுழைத்து பயிற்சி கொடுக்க வேண்டும்முன்பெல்லாம் செல்ப்பில் இருக்கும் புத்தகங்களை என் தந்தையாரே வாசிக்க கொடுத்ததில்லைநானாக வாசித்துப் பழகியது தான்.

ஆக நம்பயல் இறுதியாக தன் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டான்வர்ணத்தில் இருந்தால் மட்டுமே வாசிக்க இயலும் என்றுகாமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை பரவலாக இலக்கிய அந்தஸ்து போல இப்போது ஆகிவிட்டது.இலக்கிய வாசிப்பாளர்கள் தொடர்ந்து காமிக்ஸ்களை வாங்குகிறார்கள்இது எதுக்கு வெட்டியா!? என்று காமிக்ஸ் ஸ்டாலை கடந்து அவர்கள் செல்வதில்லைசென்ற வருடம் வியட்நாமிய போர்க்கால சம்பவங்களை வைத்து வர்ணத்தில் ஒரு புத்தகம் லயன் காமிக்ஸ் கொண்டு வந்ததுஅது இலக்கிய வாசிப்பாளர்களை கவர்ந்தது நினைவிருக்கலாம்.

டெக்ஸ் வில்லரின் கதைகள் துப்பாக்கிச் சத்தங்கள் நிறைந்ததுஇவரைப்பற்றி விளக்கமாய் சொல்ல நான் கூகிளில் தேடி எடுத்து சொல்லிப்போகும் எழுத்தாளனல்லசிகப்பாய் ஒரு சொப்பனம் டெக்ஸ் வில்லர் அண்ட் கோ இணைந்து செவ்விந்தியர்களின் கொட்டத்தை அடக்கும் கதைவழக்கமாக எல்லாமே அப்படித்தான் என்ற போதிலும் இந்தக் கதை செவ்விந்தியர்களும் அவர்கள் பிரிவில் இருக்கும் பல குழுக்களும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட இறங்கும் கதைஅதற்காக அவர்கள் துப்பாக்கிகளின் தேவையை உணர்ந்து கள்ளத்தனமாக சேகரிக்க இறங்கிய கதை.

தமிழில் துப்பறியும் நாவல்கள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மாறி மாறி வருவது போன்று டெக்ஸ்வில்லரும் அவரது உதவியாளன் டைகரும் ஒருபுறம் கிளம்பமறுபுறம் இரவுக்கழுகாரின் மகனும் அவன் மாமா கிட் கார்சனும் பயணப்பட கதை இருதிசையில் பயணிக்கிறது.  கீழே வைக்க முடியாத விறுவிறுப்பு ! ஹூவால்பை மலைப்பகுதி செவ்விந்தியன் தேவதையோடு பேசி மக்களை ஒருங்கிணைப்பது என்பதெல்லாம் திரைப்பட பாணியே தான்ஆக ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்து ரசித்த நிறைவை நாம் அடைகிறோம்!

இரவுக் கழுகாரேஉம்மை சிலகாலம் வாசிக்கலாம் தான்.

-வா.மு.கோமு.

எஸ்.ராமகிருக்ஷ்ணன்

கனவெங்கும் காமிக்ஸ்.

கையில் கிடைத்த வார இதழ்கள், நாளிதழ்களில் வெளியான விளம்பரங்கள், மற்றும் புகைப்படங்களை வெட்டி எடுத்து அதை ஒரு நோட்டில் படக்கதை போல ஒட்டி ஒவ்வொன்றின் மேலும் சிறிய சிறியதாக ஸ்கெட்ச் பென்சிலில் எழுதி நானே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை தயாரித்த போது எனது வயது பதினைந்து.

அந்த வயதில் என் உலகம் காமிக்ஸ் புத்தகங்களால் நிரம்பியிருந்தது. அதிலும் இரும்புக்கை மாயாவியை போல ஆவது என்பது மட்டுமே வாழ்வின் பிரதான நோக்கமாக இருந்தது. உடல் மறைந்து போய் கைமட்டும் தனியே காற்றில் மிதந்து செல்கிறது என்ற வரிகள் தந்த வியப்பு எளிதில் மறக்ககூடியதில்லை.பள்ளிபுத்தகங்கள் மனதில் இருந்த கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உதிரச் செய்து கொண்டிருந்த போது சாசகத்தின் மீதும் விசித்திரங்களின் மீதும் மனதை குவிய செய்தன காமிக்ஸ் புத்தகங்கள்.

தனித்து மேயும் எருமையை போல மிக சாவகாசமாக நகரும் சூரியனும், தூரத்து பனைகளும், மழையற்று போய் அடிவானம் வரை வீழ்ந்து கிடக்கும் வெம்பரப்பும், வெக்கை குடித்து வாழ்ந்த மனிதர்களும் கொண்ட கிராமப்புறத்தில் வளர்ந்த எனக்கு வீட்டில் இருந்த புத்தகங்களும் கிராம நூலகமும் துணையாக இருந்தன.

அந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே குறை ஏன் நூலகங்களில் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவதில்லை என்பதே. மாதந்தோறும் வெளியாகும் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் எதுவும் நூலகத்தில் படிக்க கிடைக்காது. ஆயிரம் புத்தகங்கள் உள்ள கிராம நூலகத்தில் வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க ஒரு காமிக்ஸ் புத்தகம் கூட இருக்காது. பல முறை இதை பற்றி நூலகரிடம் கேட்டிருக்கிறேன். அவர் காமிக்ஸ் படிப்பதால் அறிவு வளராது என்று பொதுவாக கூறுவார். அது உண்மையில்லை என்று அந்த வயதிலே தோன்றியது. காமிக்ஸ் புத்தகங்களின் வழியே நான் நிறைய கனவு கண்டேன். கெய்ரோ நகரம், தங்கவிரல் கொண்ட புத்தர்சிலை, நயாகரா அருவி, வேதாளம் வசிக்கும் காடு, நியூயார்க் நகரம், சிவப்பிந்தியர்கள், இரட்டை குழல் துப்பாக்கி, கடற்கொள்ளையர்கள் என்று கனவெங்கும் காமிக்ஸ் உலகம் நிரம்பி வழிந்தது.எழுத்தின் மீதான எனது முதல் ஆசைகளை உருவாக்கியது காமிக்ஸ் புத்தகங்களே. ஒரு நாள் விருதுநகரில் நான் படித்த பள்ளி அருகில் இருந்த பழைய பேப்பர் கடை ஒன்றில் ஆங்கிலத்தில் இருந்த டின்டின் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை பார்த்தேன். அதை விலைக்கு கேட்ட போது ஐம்பதுபைசா என்றார் கடைக்காரர். நண்பனிடம் கடன் வாங்கி அதை பெற்றேன். ஒரு வார காலம் டின்டின் இன் அமெரிக்கா என்ற அந்த சித்திரகதையின் மீது தமிழில் நானாக ஒரு கதையை எழுதி ஒட்டி நண்பனுக்கு படிக்க தந்தேன். அவனால் நம்பவே முடியவில்லை. எப்படி இந்த கதையை எழுதினாய் என்று ஆச்சரியப்பட்டான். 

டின்டின் காமிக்ஸில் இருந்த கதைக்கும் நான் எழுதியதற்கும் ஒரு சம்பந்தமில்லை. நான் எழுதிய கதை இரும்புகை மாயாவி படித்து படித்து உருவானது. கிட்டதட்ட அது போன்ற ஒரு சாகசம். அந்த புத்தகத்தை நூலகத்தில் படிப்பதற்கு கொண்டு போய் போடலாம் என்ற யோசனையை அவனே சொன்னான்.

மறுநாள் அதை கையில் எடுத்து கொண்டு நூலகரை பார்க்க சென்றிருந்தேன். என்ன புத்தகமது என்று புரட்டி பார்த்தபடியே அவர் இதை எல்லாம் படிக்க போட முடியாது என்று மறுத்தார். நான் விடாப்பிடியாக நின்று கொண்டிருந்தேன்.

நீண்ட யோசனைக்கு பிறகு..சரி அந்த மேஜையில் போடு என்று சொல்லி கையை காட்டினார்.தினசரி பேப்பர்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போடப்படும் மேஜையது. நானாக தயாரித்த காமிக்ஸ் புத்தகத்தை அதில் போட்டேன். அன்றிலிருந்து தினமும் இரண்டு முறை நூலகம் சென்று அதை யாராவது ஒருவர் கையில் எடுத்து படிக்கிறார்களா என்று பார்த்து கொண்டேயிருந்தேன். நான் அறிந்து ஒருவர் கூட புரட்டி பார்க்கவில்லை. ஒரு நாள் மாலை அதை தேடிய போது மேஜையில் காணவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று புரியாமல் நூலகரை விசாரித்த போது எவராவது திருடிக் கொண்டு போயிருப்பார்கள் என்றார்.

உண்மையில் எனக்கு அது சந்தோஷமாகவே இருந்தது. இந்த கிராமத்தில் என்னை போலவே காமிக்ஸ் படிக்கும் இன்னொருவன் இருக்கிறான். அவன் திருடி காமிக்ஸ் படிக்குமளவு வெறி கொண்டிருக்கிறான். அவன் யார் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று யோசனையோடு இருந்தேன்.களவு போன காமிக்ஸ் தந்த உற்சாகம் தான் நானாக இன்னொரு காமிக்ஸ் புத்தகத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. தந்தி பேப்பர் துவங்கி ரஷ்ய குழந்தைகள் இதழான மாஷா வரை வெளியாகி இருந்த படங்கள், ஒவியங்கள், புகைப்படங்களை வெட்டி எடுத்து ஒரு நோட்டில் ஒட்டி காமிக்ஸ் புத்தகம் போலவே தயாரித்தேன். நான் எழுதிய தயாரித்த காமிக்ஸ் என்பதில் இருந்த சந்தோஷம் அளவற்றது. 

அதற்கு என்ன தலைப்பு வைப்பது என்று யோசனையாக இருந்தது. கதையில் வரும் வில்லனுக்கு ஒற்றைகண் மட்டுமே இருக்கும். அவனை கண்டுபிடிக்க இரும்புகை மாயாவி மதுரையில் அலைந்து திரிவார். அவன் நாயக்கர் மகால் அடியில் உள்ள சுரங்கபாதைக்குள் குடியிருப்பான் என்று இரும்புகை மாயாவியமதுரையில் ரிக்ஷாவில் அலைய விட்டிருந்தேன். ஆகவே அந்த கதைக்கு ஒற்றைகண் மாயாவி என்ற தலைப்பு வைத்தேன்.

பள்ளி புத்தகங்களுக்கு நடுவில் அதை மறைத்து வைத்து எடுத்து போய் மதியஉணவு வேளையின் போது நண்பனுக்கு படிக்க தந்தேன். அவன் அதன் இரண்டு மூன்று பக்கம் படித்து முடித்தவுடன் எதை பார்த்துடா எழுதினாய் என்று கேட்டான். நானாக எழுதினேன் என்று பலமுறை சொல்லியும் நம்பவில்லை. இரண்டு கைகளிலும் சத்தியம் செய்துபோதாமல் அவன் உச்சந்தலையில் அம்மா பெயரால் சத்தியம் செய்தேன். இதை வாடகைக்கு படிக்க விடலாம் என்ற யோசனையை நண்பன் சொன்னான்.

எங்கள் பள்ளியின் அருகில் ஒரு பெட்டிகடை இருந்தது. அங்கே காமிக்ஸ் விற்பார்கள். காமிக்ஸ் விலைக்கு வாங்க முடியாதவர்களுக்காக கடைக்காரர் ஒரு சலுகை அறிவித்திருந்தார். அதன்படி அதே கடையின் முன் உள்ள பெஞ்சில் அமர்ந்து ஒரு காமிக்ஸ் புக்கை படித்து முடித்து தருவதற்கு பத்து காசு தர வேண்டும்.

 இதற்காகவே பள்ளிக்கு காலையில் வேகமாக கிளம்பி வந்திருக்கிறேன். கடையின் முன்னால் கிடந்த பெஞ்சில் அமர்ந்தபடியே வேகவேகமாக காமிக்ஸ் புத்தகங்களை வாசிப்பேன். ஒட்டகம் தண்ணீர் கண்ட இடத்தில் வயிறு நிறைய உறிஞ்சி குடித்துவிட்டு தேவைபடும் அதே தண்ணீரை கொஞ்சமாக எதுக்களித்து தாகம் தீர்த்து கொள்ளும் என்கிறார்களே அது போன்றது தான் என் வாசிப்பும். அந்த கடையில் தொங்கிய அத்தனை காமிக்ஸ் புத்தகங்களையும் வாசித்துவிட வேண்டும் என்று வெறி கொண்டிருந்தேன்.

வீட்டில் தின்பண்டம் வாங்க தரும் காசை சேர்த்து வைத்து காமிக்ஸ் வாங்கி படிப்பேன். நண்பர்கள் வைத்திருந்த காமிக்ஸ் புத்தகங்களை பரிமாற்றம் செய்து கொள்வோம். பள்ளியில் காமிக்ஸ் வைத்திருந்ததற்காக கண்டுபிடிக்கபட்டு அடிவாங்கியிருக்கிறேன். அந்த மொத்த ஆசையின் வடிவமாக ஒற்கைகண் மாயாவி உருவாகியது.

அதை வாடகைக்கு கொடுக்க இயலுமா என்று நண்பன் தயங்கி தயங்கிகடைக்காரரிடம் கேட்டான். இதை யாரு படிப்பா என்று கேலி பேசியதோடு எங்களை விரட்டிவிட்டார் கடைக்காரர்.

நூலகத்திலே போடலாம் என்று முடிவு எடுத்தேன். அப்போது முன்பு நூலகர் சொன்ன ஒரு யோசனை நினைவிற்கு வந்தது. அதன்படி புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கம் வாசகர்கள் பதில் எழுதுவதற்கு வசதியாக வெறுமனே விட்டு வைத்திருந்தேன்.

 ஆர்வத்துடன் காமிக்ஸ எடுத்து கொண்டு கிராம நூலகத்திற்கு சென்றேன். அன்று நூலகம் திறக்கபடவில்லை. வெள்ளிகிழமை மட்டும் தானே விடுமுறை இன்று ஏன் அவர் திறக்கவில்லை என்று காத்துக் கொண்டேயிருந்தேன். நூலகர் ஒரு விவசாயி. கிராமத்தில் மழை பெய்துவிட்டால் அவர் விவசாயம் பார்க்க சென்றுவிடுவார். அதனால் சில நாட்கள் நூலகம் பூட்டியே கிடக்கும். அன்றும் அவர் விதை வாங்குவதற்காக சென்றிருந்தார் என்று கேள்விபட்டேன். மூடிக்கிடந்த நூலகத்தின் வாசலில் உட்கார்ந்தபடியே அந்த காமிக்ஸ் புத்தகத்தை நானாக வைத்து கொண்டிருந்தேன்.

மனதில் இரும்பு கைமாயாவி, ஜானி நீரோ, ரிப்கெர்பி, டேவிட் லாரன்ஸ், வேதாளம், மாண்ட்ரெக், என்று காமிக்ஸ் கதாநாயகர்கள் ஒவ்வொருவரையும் வைத்து இது போல நானாக ஒரு படக்கதை தயாரிக்க வேண்டும் என்ற கனவு ஒடிக் கொண்டிருந்தது. மறுநாள் நூலகம் திறந்த போது முதல் ஆளாக நான் அந்த காமிக்ஸ நூலகத்தில் போட்டேன்.

இரண்டு வாரங்கள் வரை அதில் யாருமே ஒரு வரி கூட எழுதவில்லை. பழைய இதழ்களை மாற்றுவதற்கான நாளின் போது நூலகர் காமிக்ஸ எடுத்து கொள்ள சொன்னார். தோற்றுப்போன மனதுடன் அதை கையில் எடுத்தேன். கசங்கி, நசுங்கி போயிருந்தது. தற்செயலாக கடைசி பக்கத்தை புரட்டிய போது அதில் காமிக்ஸ் புத்தகம் நன்றாக உள்ளது ஜி.முத்துசெல்வி என்றிருந்தது. நூலகரிடம் அதை காட்டி யார் அது என்று கேட்ட போது அது அருகாமை மில்லில் வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி என்று சொன்னார். அந்த பெண்ணை ஒருமுறையாவது பார்க்க வேண்டும்என்று நினைத்து கொண்டேயிருந்தேன். பின்னொரு நாள் அந்தபெண் புத்தகம் எடுக்க சைக்களில் வரும்போது பார்த்தேன். இருபத்தைந்து வயதிருக்கும். மெலிந்த தோற்றத்திலிருந்தார். நூலகர் அந்த பெண்ணிடம் இந்த பையன் தான் அந்த காமிக்ஸ் புத்தகத்தை தயாரித்தவன் என்று என்னை காட்டி சொன்னார். அவள் மெல்லிய புன்சிரிப்புடன் நல்லா இருந்துச்சிடா தம்பி என்று சொல்லிவிட்டு தன் வீட்டில் கொஞ்சம் காமிக்ஸ் புத்தகம் இருக்கிறது வேண்டுமானால் வந்து வாங்கிகொள் என்றாள்.எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அடுத்த நாளே மில்காலனியில் இருந்த அவளது வீட்டிற்கு சென்றேன். மிகச் சிறிய வீடு. குழந்தை தொட்டிலில் உறங்கி கொண்டிருந்தது. ஒரு நார்பெட்டியில் பத்து பதினைந்து காமிக்ஸ் புத்தகங்களை போட்டு வைத்திருந்தார் அந்த அக்கா. அதில் நான் தயாரித்த டின்டின்னும் இருந்தது. அதை காட்டிய போது சிரித்தபடியே அங்கே உட்கார்ந்து படிக்க நேரமில்லை அதான் எடுத்துட்டு வந்துட்டேன் என்றபடியே எல்லா காமிக்ஸ் புத்தகங்களையும் எடுத்து கொள்ள சொல்லிவிட்டு என்னை அழைத்து கொண்டு அருகாமையில் உள்ள பெட்டிகடையில் குடிப்பதற்காக டொரினோ வாங்கி தந்தார்.

என்னிடம் நிறைய காமிக்ஸ் இருக்கிறது. படிக்க வேண்டுமா அக்கா என்று கேட்டேன். குழந்தையை கவனிக்கவே நேரமில்லை என்று மறுத்தபடியே நீ நல்லா எழுதுறே என்றார். அந்த வயதில் அவர் தந்த உற்சாகம் அளப்பறியது.

அதன் சில வாரங்களில் நூலகத்திற்கு புதிய நூலகர் மாறுதலில் வந்து சேர்ந்தார். அவர் அரசு அனுமதிக்காத எதையும் நூலகத்தில் படிக்க போட முடியாது என்று கறாக இருந்தார். அத்துடன் என்னை போன்ற சிறுவர்களை புத்தகங்களை தேட உள்ளே அனுமதிக்கவே மறுத்தார். அவர் மீதிருந்த கோபத்தில் நூலகம் பக்கம் போகவேயில்லை.

ஒரேயொரு முறை நகரில் அந்த அக்காவை குழந்தையுடன் பொது மருத்துவமனை வெளியே பார்த்தேன். அதன் பிறகு ஒரு முறை அவர்கள் வீட்டை தேடி சென்ற போது எட்டயபுரத்தில் உள்ளஒரு மில்லுக்குமாறி போய்விட்டதாக சொன்னார்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு வருத்தமாக இருந்தது. 

என்ன உறவு அது. எப்படி அந்த அக்காவிற்கு காமிக்ஸ் படிக்கும் பழக்கம் வந்தது. ஏன் அவள் திருமணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாகசகதைகளிலிருந்து விலகிவராமலே இருந்தாள். எல்லா காமிக்ஸ் புத்தகங்களை விடவும் புதிரானதும் முன்அறிய முடியாததும் தான் நமது வாழ்க்கை என்பதை அவளே புரிய வைத்தாள். 

ஆனால் காமிக்ஸின் மீதான விருப்பம் அந்த அக்காவால் அதிகம் தூண்டப்பட்டது. சிவகாசிக்கு சென்று அங்கே முத்துகாமிக்ஸ் வாங்க ஆரம்பித்தேன். அச்சக கழிவு காகிதம் ஒன்றில் காமிக்ஸ் புத்தகம் ஒன்றின் பல பக்கங்கள் சிதறி கிடந்ததை சேகரித்து ஒட்டி படித்திருக்கிறேன்.காமிக்ஸ் கதாநாயகர்கள் பெரியவர்களா, சினிமா கதாநாயகர்கள் பெரியவர்கள என்ற போட்டி சிறுவர்களுக்குள் நடக்கும். அப்போது ஏன் இரும்பு கைமாயாவி, ஜானி நீரோ போன்ற கதாபாத்திரங்களில் எனக்கு விருப்பமான நடிகர்கள் நடிப்பதில்லை என்று குழம்பியிருக்கிறேன். காமிக்ஸ் கற்பனையின் எல்லையற்ற சாத்தியங்களை திறந்துவிட்டது. பள்ளி இறுதியாண்டு தேர்வு என்பதால் படிப்பில் கவனம் சிதறி போகிறது என்று வீட்டில் உருவாக்கிய கட்டாயம் கெடுபிடி என்னை காமிக்ஸில் இருந்து விலகி படிப்பின் மீது கவனம் கொள்ள செய்ததது. அதன் பிறகு பல வருசங்கள் காமிக்ஸ் படிக்கவேயில்லைகல்லூரி நாட்களில் ரஷ்ய இலக்கியம் தமிழ் இலக்கியம் என்று தேடிதேடி வாசித்தபோது ஒரு ஆசை உருவானது. நான் தமிழில் படித்த காமிக்ஸ் புத்தகங்களை ஒரு முறை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். அப்போது தான் அவை எப்படி தமிழில் உருமாற்றம் பெற்றிருக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடியும் என்று தமிழின் வெளியான முக்கிய காமிக்ஸ் புத்தகங்களை ஆங்கிலத்தில் தேடி வாசிக்க துவங்கினேன். அப்போது தான் தமிழ்காமிக்ஸின் முக்கியத்துவம் உணர முடிந்தது.தமிழ் காமிக்ஸின் வரலாறு தனித்து நூலாக எழுதப்பட வேண்டியது. குறிப்பாக முத்துகாமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் அதன் பாதையில் இன்று தொடர்ந்து வரும் காமிக்ஸ் பதிப்புகள் குறித்து விரிவான ஆய்வும் பதிவுகளும் அவசியமானவை. இன்று இணையத்தில் ஒரளவு இதை பற்றிய கவனமும் அக்கறையும் இருக்கிறது. உலகெங்கும் உள்ள காமிக்ஸ் வாசகர்கள் தேடி தேடி காமிக்ஸ் வாங்குகிறார்கள். படிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் தமிழ்காமிக்ஸ் பற்றி விரிவான நூல் எதுவும் இதுவரை வெளியாக வில்லை. ஒருவராக இல்லாமல் பலரும் காமிக்ஸ் குறித்து எழுதிய கட்டுரைகளாக கூட அதை தொகுக்கலாம்.

புகழ்பெற்ற தமிழ் காமிக்ஸ்களை வெளியிட்ட முதல் நிறுவனம் முத்துகாமிக்ஸ். சிவகாசியில் இருந்து சௌந்திர பாண்டியன் அவர்களால் நடத்தபட்ட முத்துகாமிக்ஸ் 1971 ம் ஆண்டு அதன் முதல் காமிக்ஸ வெளியிட்டது. இரும்பு கை மாயாவி என்ற அந்த காமிக்ஸ் புத்தகம் 128 பக்கம் கொண்டது. விலை 90 பைசா.

1962-ல் லண்டனில் Fleetway பதிப்பகத்தின் வழியே அறிமுமாகி பிரபலம் அடைந்த The Steel Claw தான் இரும்பு கை மாயாவியாக தமிழில் உருமாற்றம் பெற்றார். ப்ளீட்அவே பதிப்பகம் காமிக்ஸ் பதிப்பு துறையில் முன்னோடி நிறுவனம். அவர்கள் சிறார்களுக்காக இதழ்கள், சித்திர கதைகள் வெளியிடுவதில் முன்னோடியாக இருந்தார்கள்.

தமிழில் ஆரம்ப நாட்களில் வெளியான பெரும்பான்மை காமிக்ஸ் புத்தகங்கள் ப்ளீட்அவே பதிப்பக வெளியீடுகளே. இங்கிலாந்தில் பரபரப்பான விற்பனையான இந்த காமிக்ஸ் புத்தகங்களின் உரிமையை முறையாக வாங்கி அந்த சித்திரங்களையும் முகப்பு அட்டைகளையும் அப்படியே பயன்படுத்தி கொண்டு அதை சரியாக தமிழுக்கு உருமாற்றம் செய்தார்கள். அந்த பணியை மேற்கொண்டவர் முல்லை தங்கராசு.

அவர் தான் முத்துகாமிக்ஸின் பொறுப்பாசிரியராக இருந்தார்.காமிக்ஸ்புத்தங்களுக்கு என்றே ஒரு தனிதமிழை அவர் உருவாக்கினார். வில்லன்கள் விடும் சவாலும், அதற்கு மாயாவி தரும் பதிலடியும் வியக்கவைக்குமளவு தமிழ்நடையில் எழுதப்பட்டிருந்தது.அவை இன்னொரு மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவை என்ற பேதம் அறியாதபடி கதை மிக அழகாக விவரிக்கபட்டிருந்தது. மாறுபட்ட கலாச்சாரம், கதைக்களம் யாவும் அந்நியமாக இருந்தபோதும் அதை உணர முடியாதபடியே தமிழ் மொழிபெயர்ப்பின் சரளம் உள்ளுர் காமிக்ஸ் ஒன்றை வாசிப்பதை போல உணர செய்தது.

ஸ்பானிய சித்திரக்காரரான Jesus Blasco தான் இரும்புகை மாயாவியை வரைந்தவர Henry Kenneth Bulmer  ,இதற்கான கதையை எழுதியிருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என்று இந்தியாவெங்கும் இரும்புகை மாயாவி புகழ்பெற்ற காமிக்ஸ் கதாநாயகனாக அறிமுகமானார்.இரும்பு கை மாயாவி கதாபாத்திரம் உருவான கதை சுவாரஸ்யமானது. அவரது உண்மை பெயர் லூயிஸ் கிராண்டேல். இவர் பாரிங்கர் என்ற பேராசிரியரின் உதவியாளராக வேலை செய்கிறார். ஒருமுறை லேப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது கை துண்டிக்கபட்டு செயற்கை கரம் பொருத்தபடுகிறது. அந்த செயற்கை கரத்தில் மின்சாரம் பாயும் போது அவர் உடல் மறைந்து கை மட்டுமே தனியே செயல்படுகிறது என்ற உண்மையை ஒரு நாள் தற்செயலாக கிராண்டேல் கண்டுபிடிக்கிறார். எவ்வளவு மின்சாரம் உடலில் பாய்கிறதோ அவ்வளவு மணி நேரம் அவர் அரூபமாக இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்கிறார்.

இந்த சக்தியை கொண்டு நல்வழிகளில் பயன்படுத்தலாம் என்று பாரிங்கர் அறிவுரை சொல்கிறார். இதனால் பிரிட்டனின் உளவுபிரிவான நிழல்படையில் சேர்கிறார் கிராண்டேல். அழிவு கொள்ளை தீமை கழகம் எனப்படும் அகொதீகவின் செயல்பாடுகளை முறியடிக்கும் வீரராக அவதாரம் கொள்கிறார். இப்படி தான் இரும்புகை மாயாவியின் சாகசம் துவங்கியது. இன்றைய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்கள் அத்தனையும் இரும்புகை மாயாவியிடமிருந்து பெற்ற உந்துதல்களே.இரும்புகை மாயாவியை அழிக்க நினைக்கும் அமைப்பின் பெயர் FEAR அதை தமிழில் திறம்பட அகொதீகழகம் என்று மாற்றியது இன்று வாசிக்கையிலும் வியப்பளிக்கிறது.இரும்புகை மாயாவிக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து ப்ளீட்அவே காமிக்ஸ் தமிழில் வெளியாக தளம் அமைந்து தந்தது. தமிழ் காமிக்ஸிற்கு என தனி ரசிகர்கள் உருவானார்கள். முத்து காமிக்ஸ் நிறுவனமே லயன் காமிக்ஸ் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி விஜயனை ஆசிரியராக கொண்டு தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட துவங்கியது.

ஆரம்ப நாட்களில் தமிழில் வெளியான காமிக்ஸில் பெரும்பான்மை காமிக்ஸ் ஹீரோக்கள் ஆங்கில கதாபாத்திரங்கள். ஆங்கிலம் அறியாத பிற மொழி கதாநயாகர்களை அறிமுகப்படுத்து பணி 1980 களில் துவங்கியது. பிரெஞ்ச் மற்றும் அமெரிக்க சித்திர கதைகள் தமிழில் வெளியாக துவங்கின. கௌபாய்கள் தமிழில் அறிமுகமானார்கள். மெக்ஸிக கொள்ளையர்களின் துப்பாக்கி சண்டைகள் பரபரப்பாக வாசிக்கபட்டன. லக்கிலுக்கின் வேடிக்கையான சாகசம் பெரிதும் ரசிக்கபட்டது.டெக்ஸ்வில்லர் படிக்க ரசிகர்கள் காத்துகிடந்தார்கள். முத்து காமிக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முந்நூறுக்கும் மேலான காமிக்ஸ் புத்தகங்களை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

இதில் பல காமிக்ஸ் புத்தகங்கள் இந்தியாவில் தமிழில் மட்டுமே வெளியாகி உள்ளன. சில ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முன்பு நேரடியாக ஸ்பானிய மொழி அல்லது இத்தாலியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் காமிக்ஸின் தலைநகரம் சிவகாசியே. இன்றுள்ள எந்த இணைய வசதியும் இல்லாமல் தபால் மூலமாகவே காமிக்ஸ் வெளியிடும் வெளிநாட்டு பதிப்பகங்களை தொடர்பு கொண்டு பலமாதங்கள் காத்திருந்து அதற்கான உரிமை பெற்று அந்த மூலச்சித்திரங்களை வரவழைத்து அதே நேர்த்தியுடன் அச்சிட்டு குறைவான விலையில் விற்பனை செய்தது பெரிய சாதனையே. ஒவ்வொரு காமிக்ஸ் புத்தகத்தின் பின்னும் அதை வெளியிடுவதற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் மொழிமாற்றத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்று பலர் அறியாத ரகசியங்கள், சுவாரஸ்யஙகள் ஒளிந்திருக்கின்றன.வீடு தோறும் சிறுவர்கள் படிக்கும் புத்தகமாக இருந்த காமிக்ஸ் தொலைக்காட்சியின் வருகையும். ஆங்கில பள்ளிகளின் கெடுபிடிகளும், புத்தக வாசிப்பில் அக்கறையற்ற புறச்சூழலும் இணைந்து கொள்ள கடந்த பதினைந்து வருடங்களில் மெல்ல குறைந்து போக துவங்கின. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் காமிக்ஸ் மீது புதிய விருப்பம் உருவான போதும் இன்றுள்ள சிறார்கள் இந்த காமிக்ஸ் கதைகளை படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லைகிராபிக் நாவல், மாங்கா, விஞ்ஞான புனைகாமிக்ஸ், என்று அதிநவீன மாற்றம் கொண்டுள்ள காமிக்ஸ் புத்தகங்களே அவர்களது விருப்பமாக உள்ளது. சென்ற புத்தக கண்காட்சியின் போது ஐம்பது பழைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்றை கூட படிக்க எனது பிள்ளைகள் விருப்பம் கொள்ளவேயில்லை . அந்த சாகசங்களை விடவும் பெரியதாக தாங்கள் வீடியோ கேமில் விளையாடி பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள். கூடுதலாக அதே விளையாட்டுகள் திரைப்படமாகவும் வந்துவிடுகின்றன.

சாகசத்தின் மீதான விருப்பம் சிறார்களுக்கு அப்படியே தானிருக்கிறது. ஆனால் வாசிக்கபடும் புத்தகம் மாறியிருக்கிறது. 1960 துவங்கி 1980 வரையான உலகெங்கும் உள்ள முக்கிய காமிக்ஸ்களை முத்து காமிக்ஸ் போன்ற நிறுவனம் தமிழில் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் புதிது புதிதாக காமிக்ஸ் புத்தகங்கள் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு வயதினர் படிக்கும்படியாக , மாறுபட்ட துறை சார்ந்து வெளியாகின்றன. அதில் ஒரு சில கூட தமிழில் வெளியாகவேயில்லைபதினைந்து வயதில் நானாக ஒரு காமிக்ஸ் புத்தகம் தயாரித்து விளையாடியது போன்று இன்றும் நானாக ஒரு கிராபிக் நாவல் ஒன்றினை உருவாக்க முனைந்திருக்கிறேன். ஆர்வமான ஒவியர்களின் உதவியில்லாமல் அது சாத்தியமாகாது. ஆனால் காமிக்ஸ் மீதான விருப்பம் கொண்ட ஒவியர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக தங்களை இந்த துறையில் ஈடுபடுத்தி கொள்ள முடியாதபடி அதன் பொருளாதார சிக்கல் உள்ளது.

நமது ஊர் கதைகள் , இந்திய சரித்திரம், நாட்டார் மரபு கதைகள், புராணம், இதிகாசம் இதிலிருந்து புதிய சித்திரக்கதைகளை உருவாக்குவதற்கு எண்ணிக்கையற்ற சாத்தியங்கள் இருக்கின்றன. தமிழ் வாழ்விலிருந்து உருவாகும் சித்திரக்கதையை எழுதும் ஆசை எனக்கிருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கு நான் ஒருவன் மட்டும் போதுமானவன் இல்லை. கூட்டு முயற்சிகளே இதை சாத்தியமாக்க கூடும். மாறிவரும் சூழலில் அது சாத்தியம் என்ற நம்பிக்கை உள்ளது.அந்த நாள் வரை மறுபடி மறுபடி வாசிப்பதற்கு என்னிடம் இன்றும் இரும்புகை மாயாவி காமிக்ஸ் உள்ளது. அதை வாசிக்கும் போது எழுத்தாளன் தான் உண்மையான இரும்புகை மாயாவி என்று தோன்றுகிறது. காரணம் எழுதும் நிமிசங்களில் அவனது கை மட்டுமே இயங்குகிறது. அவன் மறைந்துவிடுகிறான். கை மட்டுமே எதை எதையோ எழுத்தில் உருவாக்குகிறது. மின்சாரம் இழந்தவுடன் மாயாவி தன்னிலை பெறுவது போலதானிருக்கிறது எழுதி முடிக்கும் மனநிலையும்.பால்யம் உருவாக்கும் கனவுகள் குளத்தில் எறிந்த கற்களை போன்றவை. அவை கண்ணில் படுவதில்லை ஆனால் கரைந்து போகாமல் நீருக்குள்ளாக அமிழ்ந்து கிடக்கின்றன. காமிக்ஸ் கனவுகளும் அப்படியானது தான்.

எஸ்.ராமகிருக்ஷ்ணன்.

- நினைவுகள் தொடரும்.